பக்கம் எண் :

190


உணவுக்காக உயிர்கொடுப்பதா?

"நல்லுணவும் பிணியாளர் உயிர்க்கொல்லும்

      நஞ்சாதல் அறிவேன் ஆனால்,

புல்லுணவுக் காகவுயிர் போக்குதற்குத்  

      துணிபவரைக் புவியில் காணேன்!

நல்லுணர்வு பெற்றிடுவீர், மாதரசி!"      

      எனயூசுப் நவிலக் கேட்டுச்

"சொல்லுணவு படைக்கின்ற என்னுயிரே!"   

      என்றழைத்துச் சுலைகா சொல்வாள்:

இருவரின் எண்ணங்கள் :

"என்னிதயச் சோலையினில் தாம்விதைத்த  

      காதல்விதைக் கேற்ற வண்ணம்

என்னுணர்வுக் குருதியினைத் தண்ணீராய்ப்

      பாய்ச்சிவளர்த் தின்ப முற்றேன்;

உன்னுடைய காதல்விதை உயர்கனிகள்

      தருமரமாய் ஓங்கி, என்றன்

மென்னுடலில் நரம்பாக வேரோடி     

      விட்டபின்னே வெட்டப் போமோ?"

 

யூசுப் :

"வாய்மையெனும் மாளிகையின் மதிலுடைக்கப்

      பெருமரமே வளரக் கண்டால்

தூய்மையெனும் கோடரியால் பிளந்தெறிவர்,

      மாளிகையின் சொந்தக் காரர்!

தாய்மையெனும் அரும்பதவி தாங்குகின்ற

      பெண்குலமே தவறு மாயின்

மாய்ந்தொழியும் மனிதநெறி அதற்குதவும்

      ஆடவரும் மிருக மாவார்!"