| சுலைகா : "பெண்ணொருத்தி இளநெஞ்சைக் கனவினிலும் கெடுக்காத பெருமை பெற்றோர் பொன்னுரைகள் அத்தனையும் புகலுகின்ற நாவரசே! புவன மெங்கும் இன்னுரைகள் கூறுபவர் இருக்கின்றார். தன் தவற்றை எண்ணிப் பார்ப்போர் மன்னுயிரில் அரிதரிது. அவர்கள் மனம் பெற்றீரேல் மறையும் துன்பம்" யூசுப் : "தன்னிலையைப் பெரிதென்னும் அறிவிலிகள் பிறர்நிலையைச் சற்றும் காணார்; இந்நிலையில் இருக்கின்ற காரணத்தால் என்மீது குறைசொல் கின்றீர். என்னிலையைச் சிறிதுணர்ந்தால் நும்தவறுக் கெனையழைக்க எண்ண மாட்டீர். நின்னிலையை யானறிவேன் என்றாலும் தவறிழைக்க நினைக்க மாட்டேன்!" சுலைகா : "தாயில்லாப் பிள்ளையெனச் சேயில்லார் செல்வமெனத் தகுதி யற்ற வாயில்லா ஊமையென வாழ்வில்லாக் கன்னியென வருந்தி நொந்தேன்! நீயில்லாச் சுவனமதைத் தந்தாலும் ஏற்பதற்கு நினைக்கா என்னைத் தீயுள்ளே தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்திடவோ தீர்மா னித்தாய்?" |