"உங்களின் கண்ணீர் ஒழுகிடில் என்றன் உதிரமே ஒழுகுவ தொக்கும். உங்களின் உள்ளம் வருந்திடில் என்றன் உயிரகன் றொழிவதை யொக்கும்! திங்களை மறைக்கும் முகிலென உங்கள் திருமுகம் மறைப்பது எதுவோ? இங்கெவ ருள்ளார் இயம்புவீர்!" என்று இறைஞ்சினாள் யூசுபை நெருங்கி! "ஆசையின் வலையின் வீழ்ந்திடும் சமயம் அன்புடன் இறையவன் காத்தான்! வேசையின் நெஞ்சும் வெறுப்பவர் தம்மை விரும்பிடக் கூசிடும். எனினும் பாசமென் றுரைத்து வேசையும் வெட்கும் பலவந்தம் செய்திடத் துணிந்தாய். நீசரின் வழியில் நெருங்கிடேன்" என்று நீள்விழி சிவந்திட மொழிந்தார்! "நாக்கினை அடக்கிப் பேசுவாய்!" என்று நாகமாய்த் தன்தலை நிமிர்த்தி நோக்கிய சுலைகா, "வேசையென் றென்னை நுவன்றிட எப்படி நினைத்தாய்? தேக்கிய அன்பால் நோக்கிய என்னைத் தாக்கிட முனைந்திடும் உன்றன் வாக்கினை இனியும் சகித்திடேன்" என்றாள். "வழிவிடு போகிறேன்!" என்றார். "தப்பிடும் வழிகள் எதுவுமே இல்லை. தாமத மின்றியே என்னை ஒப்பிடல் வேண்டும், இல்லையேல் யானே உம்முடல் தழுவிட முனைவேன் |