பக்கம் எண் :

201


கேடடைந்த காரணம் :

"ஆடவரின் பார்வையினில் அரிவையரை விட்டே

      ஆசைக்கனல் மூட்டிவைத்து இருவரையும் வாட்டும்

மூடச்செயல் நீக்கிடுவோம்; சுலைகாவென யாரும்

      மோகவெறி கொண்டிடாமல் காத்திடுவோம்!" என்று

நாடலையும் புதல்வியரை வீடடக்கி வைத்து      

      நகரமெங்கும் தந்தையர்கள் எழில்சுலைகா நெஞ்சம்

கேடடைந்த சூழ்நிலையைக் கேலிசெய்ய லானார்,

      கேள்வியுற்று சுலைகாமனம் துடிதுடிக்க லானாள்.

 

சுலைகாவின் யோசனை

பொருளுடைமை புகழுடைமை பொறுப்புடைமை 

                                             [யாவும்

      பொருந்தியுள பலகுடும்பத் தலைவியரைக் கூட்டி

அருளுடைமை அறிவுடைமை அழகுடைமை சேர்ந்த

      ஆணழகர் யூசுபினை அவர்களிடம் காட்டி

இருளடைந்த தன்னிலையில் அவர்களையும் ஆக்கி

      யூசுபெழில் காண்பவர்கள் தனைமறந்து நெஞ்சம்

உருகுவது இயற்கையென உணரச்செய்வ தென்று

      உளத்தினிலே திட்டமிட்டு அமைச்சரையும் 

                                          [கேட்டாள்!

 

எவ்விதமும் தம்மிழிவை நீக்கிவிடில் போதும்     

      எனும்நினைவால் பெண்களுக்குத் தனிவிருந்து வைக்க

ஒவ்வியதும் அமைச்சரஜீஸ் யூசுபுக்கும் கூறி       

      ஒப்பவைத்துக் கிடைக்கரிய உணவுப்பொருள்  

                                          [சேர்த்தார்!

செவ்வியநற் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து பெற்ற

      செல்வியர்கள், முதியவர்கள் அனைவருமாய்ச் சேர்ந்தே

இவ்விருந்து உண்பதற்கு வருகைதர வேண்டி        

      இருதினங்கள் முன்னதாக அழைப்பனுப்ப லானாள்.