"தன்னுறுதி மாற்றுகின்ற கண்களினைப் பெயர்த்தெறிதல் சரியாம் !" என்றார் "என்னிரண்டு கண்களையும் பெயர்த்தாலும் என்னிதயம் இருப்பீர்!" என்றாள். "ஏதுரைத்த போதினிலும் வாதிடுவோர் ஏற்காரென் றின்று ணர்ந்தேன்; தீதுறைந்த சிந்தையிலே ஓதுகின்ற நீதிகளும் சிதையக் கண்டேன் ! வாதுசெயும் மாதரசே, அதிவிரைவாய் என்நினைவு மறப்பீர்!" என்றார். காதடைத்துக் கண்கலங்கி நின்ற அவள் அவரடியில் கதறி வீழ்ந்தாள் ! செய்திடுதல் அறியாது நின்றிருந்த யூசுபு சிலையாய்க் கண்ணீர் பெய்தபடி அசைவற்ற நிலையானார். அந்நேரம் பெருமூச் சொன்றை எய்தபடிப் பேரரசர் ஆங்குவந்து கைபிடித்து "யூசுப்!" என்றார். மெய்யுணர்வு பெற்றவராய் யூசுபு விழிதுடைத்து வருந்த லானார் ! "உண்மைநிலை யானறிவேன், உங்களது மனத்தூய்மை உணரும் வண்ணம் அண்மையினில் திரைமறைவில் நின்றிருந்து அத்தனையும் அறிந்தேன். யாரும் உண்மையினி லுங்களைப்போற் பெண்மையினை வெற்றிகொள்ளும் உறுதி கொள்ளார் !" என்றரசர் கூறிடவே நின்றிருந்த யூசுபு இயம்ப லானார். |