"செயல்படச் செய்யாச் சட்ட திட்டங்க ளாலே யார்க்கும் பயன்தர மாட்டா, அந்தப் பாதையை மாற்ற வேண்டும்! இயன்றதைச் செய்வோ மென்று எவருமே இருந்தி டாமல் முயன்றிடல் வேண்டும்!" என்று மொழிந்திட்டார் அமைச்சர் யூசுப். ‘விரும்புவ தெல்லாம் செய்ய வேண்டிய அதிகா ரத்தைத் தருகிறோம், எதையும் செய்யத் தடையிலை!, என்றார் மன்னர். "ஒருவரின் பொறுப்பில் யாவும் ஒப்படைத் திடுவ தென்றால் இறைவனுக் கல்லால் வேறு எவருக்கும் தகுதி இல்லை!" "உற்றவர் உறவோ ரின்றி உடலுயிர் இயக்க மின்றிப் பெற்றவர் பிறந்தோ ரின்றிப் பிறர்துணை ஏது மின்றிப் முற்றிலும் தனிமை யாக முழுமையாய் இயங்கும் ஆற்றல் பெற்றவ னிறைவ னல்லால் பிறிதெவர்?" என்றார் யூசுப். "நாட்டினைத் தாக்கும் பஞ்ச நாசத்தைக் கனவின் மூலம் காட்டிய இறைவ னே,தன் கருணையால் யூசுப் தம்மை நாட்டினுக் கமைச்ச ராக நல்கினான்?" என்ற மன்னர் ‘கேட்டினை நீக்கும் மார்க்கம் காட்டுவீர்!’ என்றும் கேட்டார். |