வியர்த்திடும் உடல் நடுங்க விழிகளில் மகிழ்ச்சி பொங்க வியப்பினால் அதிர்ந்த யூசுப் வேந்தரின் கரங்கள் பற்றி "இயன்றதைச் செய்து, ஏவல் ஏற்றிடும் அடிமை என்னை உயர்த்தியே பதவிக் கெல்லாம் உயர்ந்ததைத் தந்த மன்னா!" "பெற்றவர் மகனை அன்புப் பெருக்கினால் ‘அத்தா’ என்றால் மற்றவர் தந்தை தன்னைக் மைந்தனாய்க் கொள்வ துண்டோ? கொற்றவர் அடிமை தன்னை ‘குரிசிலே’ என்றால், கேட்போர் முற்றிலும் நகைப்ப தன்றி முனிவொடு பகைப்பர்!" என்றார். சிறப்புறும் அமைச்சர் யூசுப் செப்புதல் கேட்ட மன்னர் "பிறப்பினால் அரசு செய்யும் பேற்றினைப் பெற்ற தெல்லாம் திறத்தினால் - தரத்தால், தூய்மைச் செய்கையால் சிறக்கும் யூசுப் அறத்துக்குப் பரிசி லாக அளித்திடு கின்றேன்!" என்றார் "தனியொரு ஆற்ற லாகத் தவம்தரும் சக்தி யாகக் கனிவொடு பணிவும் பூண்டு கடமையைக் காக்கும் யூசுப் இனியொரு தடையு மின்றி இயங்குதற் கெளிதாய் என்றன் மணிமுடி செங்கோல் யாவும் வழங்குவேன்!" என்றார் மன்னர். |