பக்கம் எண் :

279


பஞ்சமும் பரிகாரமும்

இயல்-57

வாழும் உயிர்கள் வான்பார்க்க

      வதைக்கும் வெப்பம் மண்பார்க்க

சூழும் பஞ்சம் மாந்தர்களைத்

      துடிக்க வைத்தே சுவை பார்க்க

தாழப் பறந்த புள்ளினங்கள்

      தாகம் தீர்க்கும் நீர்பார்த்து

வீழப் பார்த்த வேடர்களோ

      வீசினர் வலையை விருந்தாக்க !

 

ஆடிக் களித்த மக்களினை

      அயரச் செய்யும் கொடும்பஞ்சம்

தேடிச் சேர்த்த தனமனைத்தும்

      தின்று தீர்ந்தது முதலாண்டு !

வாடித் துடிக்க வைத்திடவே

      வந்திடும் இரண்டாம் ஆண்டினிலே

சூடி யணிந்த பொருள்தந்தே

      சுமந்து சென்றனர் தானியமே !

 

எட்டிப் பார்த்துத் தம் தலையை

      இறங்கச் சாய்த்தப் பாற்பசுக்கள்

முட்டிப் பார்க்கும் கன்றினுக்கு

      முடிந்த மட்டும் பாலூட்டி,

கட்டி வைத்தே உணவிட்டுக்

      காத்து வளர்ப்போர் முகம்பார்த்து

ஓட்டி யுலர்ந்த தம் வயிற்றின்

      உறுத்தலைக் காட்டக் கதறினவே !