இவையன்றி இன்னுமெதும் சொல்வ தென்றால் இவ்வுலக அழகெல்லாம் ஒன்று சேர்ந்தே அவனாக உருப் பெற்று வந்ததென்பேன்... என்று கூறி முடிக்கின்றாள். கனவில் கண்ட காதலனை நேரில் காண முடியவில்லை காலமெல்லாம் தவிக்கின்றாள்; புள்ளினங்களைப் பார்த்துப் புலம்புகின்றாள்: விண்ணிடை பறக்கும் போதும் விரிகிளை தாவும்போதும் குன்றிடை அமரும் போதும் குளித்துடல் உலர்த்தும் போதும் உண்கையில் உறங்கும் போதில் உடலுயிர் போன்று உள்ளம் ஒன்றிடும் புட்காள் என்றன் ஊழ்வினைக் கிரங்கி டீரோ? எனக் கேட்டுத் துயரடைகின்றாள். அவள் மன நிலையைச் சித்திரிக்கும் ஒரு இடத்தில் கவிஞரின் சிந்தனைத்திறன் பிரமிப்பையளிக்கிறது. காற்று அவளது மேலாடையைச் சிறிது விலக்கியதாம். அந்த உரிமை தன் காதலனின் கைகளுக்கன்றி வேறு எதற்குமில்லை என்று காற்றிடம் கடிந்து கொள்கிறாள்:- தன்னுடை விலக்கி மெள்ளத் தழுவிட முயலுங் காற்றை மின்னிடை சுலைகா தள்ளி மேலுடை சரிப்படுத்தி கண்ணிடை தோன்றா வண்ணம் கருத்தினில் நுழையும் காற்றே என்னுயிர்க் காதல் வேந்தன் எழிற்கரம் நீயோ சொல்வாய்! என்று கேட்கின்றாள். இத்தகைய பரிசுத்தக் காதலால் கலங்கி நின்ற சுலைகா விதிவசத்தால் வேற்று நாட்டு அமைச்சரொருவரின் மனைவியாகிறாள். அங்கு எதிர்பாராத விதத்தில் ஒரு அடிமையாகத் தன் கனவுக்காதலனைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகிறாள். ஒருவரின் மனைவியாகிவிட்ட அவளால் தன் காதல் மயக் கத்தை நேரிய முறையில |