பக்கம் எண் :

301


பெருமைமிகும் நல்லமைச்சர் நகர்ந்த போதில்        

      பேச்சின்றிப் பின் தொடர்ந்த புன்யா மீனே

தருமமிகும் *மிசுரதிப, எனது தந்தை                  

      தவவாழ்வின் முதிர்ச்சியினை எய்தி னாலும்-

பொறுமைமிகும் பேருள்ளம் படைத்திட் டாலும்        

      போகவிட்ட எனைக்காணத் தவித்தி ருப்பார்;

கருணையொடு தானியமே மிகுதம் தந்து              

      கடிதினிலே திரும்புதற்கு அருள்வீர்!" என்றான்.

 

"வேண்டியவ ரென்பதினால் தானி யத்தை              

      விரும்பும்வரை வழங்கிடவும் முடிந்தி டாது,

வேண்டாதா ரென்றிடினும் இல்லை என்று            

      விரட்டுதற்கும் இயலாது; வேற்று நாட்டார்

வேண்டிவரும் போதிலொரு முறையே விற்க          

      வேண்டுமெனும் விதியினையே வகுத்த நானே

மீண்டும்வரும் ஒருவருக்கே மேலும் தந்தால்          

      மிகப்பெரிய தவறலவோ?" என்ற யூசப்:

 

 முன்வந்த மூத்தவரில் ஐவ ருக்கு                    

      முறையாக தானியமே வழங்கிப் பின்னர்

உன்னோடு வந்திட்டால் மற்ற வர்க்கும்             

      உரியபடி தருகின்றேன் என்றும் சொன்னேன்;

சொன்னதுபோல் வந்திட்டீர், சொன்ன தேபோல்     

      சுமக்கின்ற அளவுக்கு மற்ற வர்க்கும்    

இன்றைக்கே தரச்சொல்வேன்;விடியுமுன்னே           

      எல்லோரும் புறப்படலாம்!"என்றும் சொன்னார்.

 

   * நபியூசுபை  மிசுர்மக்கள் தம்  நாட்டின் முழு அதிகாரமும்  படைத்த  அஜீஸ்   என்றே  அழைத்து  வந்தனர். யூசுப் என்ற பெயரை     மன்னர்கூட    பயன்படுத்தவில்லை.  முந்தைய  அமைச்சர்   அஜீஸின் பெயராலேயே    யூசுபையும்   அழைத்தனர். குர்  ஆன்   12:78-88  வசனத்தில்  அவரது   சகோதரர்கள் ‘அஜீஸ்’ என்றே அழைத்ததாக இறைவனே  கூறுகிறான்.   குழப்பத்தைத் தவிர்க்கவே, அதிகாரம் படைத்தவர்  என்ற  பொருளில்  கூறப்படும்   அஜீஸையே அதிபர் என்று குறிப்பிட்டுள்ளோம்.