பக்கம் எண் :

306


பிறந்தவர்க்கு விடைதந்து வழிய னுப்பிப்    

      பேரதிர்ச்சி கொண்டவராய் அமைச்சர் யூசுப்

சிரங்கவிழ்த்துத் திரும்புவதை சுலைகா கண்டு

      திடுக்குற்று இருக்கைவிட் டெழுந்து நின்று

கரங்கொடுத்து அமரவைத்து முகமே கூர்ந்து    

      "கலக்கமென்ன கூறிடுவீர்!" என்று கேட்டாள்;

பிறந்தவர்க்கு எனைமறைத்து வாழ நேர்ந்த    

      பெருங்கொடுமை நினைத்திட்டேன்!" என்றார் யூசுப்.

 

மறைந்திருக்கும் மர்மத்தைப் புரிந்தி டாமல்    

      மலைத்திருக்கும் என்னுள்ளத் தவிப்பு யாவும்

உரைப்பதற்கு நினைத்திட்டேன், அதுவே உங்கள்

      உள்ளத்தை வருத்துவதாய்க் கூறு கின்றீர்;

நிறைவாழ்வு பெற்றிருக்கும் நிலையில் இன்னும்  

      நீரெதற்கு மறைந்திருக்க வேண்டும்?" என்றாள்;

"இறையவனே திரையிட்டு மறைக்கும் போது      

      எப்படியா னியம்புவது?" என்றார் யூசுப்.

 

"வளருகின்ற பருவத்தில் பிரிந்த என்றன்           

      வடிவத்தின் மாற்றத்தைப் புரிந்தா ரில்லை;

வளர்ந்திட்ட அவர்களது தோற்றம் ஏதும்           

      மாறாத தால்நானே புரிந்து கொண்டேன்;   

உளம் நிறைந்த ஆவலுடன்-உள்ளுணர்வின்        

      உந்துதலால் உடன்பிறந்த புன்யா மீனின்   

நலம்காண நினைத்திட்டேன், அவனும் வந்தான்;   

      நான்வேறு அவன்வேறாய் நடித்தோம்!" என்றார்.

 

"முதுமையுற்ற என்றனுக்கே இளமை தந்து,            

      முத்தான மைந்தருக்கு அன்னை யாக்கிப்   

புதுமை செய்த இறைவனிடம் இருகை ஏந்திப்    

      போனவர்கள் திரும்பிவர வேண்டி நிற்போம்;

இதுவரையும் பிரித்துவைத்த அவனே, மீண்டும்     

      இணைத்திடுவான் பொறுத்திடுக!" என்றாள் தேவி,

"அதுவரையும் நெஞ்சுணர்வை அடக்கி யாளும்       

      ஆற்றல்பெற முயல்கின்றேன்!" என்றார் யூசுப்.