அந்த ‘கித்பீரை’ ஆதியாகமம் ‘போத்திபார்’ என்று குறிப்பிட்டிருப்பதாகவும், "போத்திபிரா தன் மகள் ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்த"தாக ஆதியாகமம் சொல்லிக் காட்டுவதாகவும், இதையே வேத அகராதி ஆதரிப்பதாகவும் எழுதியிருக்கும் அன்வாறுல் குர்ஆனின் தப்ஸீர் ஆசிரியர், இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை ஏற்கலாம்" என்று சிபாரிசும் செய்வதால் ஏற்படுகின்ற குழப்பங்களில் யாரும் சிக்கிக் கொள்ளத் தேவையில்லை. அன்வாறுல் குர்ஆன் தப்ஸீரின் ஆசிரியராலேயே தீர்மானிக்க முடியாமல் நம்மையே தீர்மானிக்கச் சொல்லுகின்ற விசயத்தை முந்தைய தப்ஸீர்களான "காஜின், ஹக்கானி, தன்தாவி, அஹ்ஸன், ரூஹுல் மஆனி’ முதலியவற்றின் ஆசிரியர்களின் தீர்மானத்தின்படியே யூசுப்-சுலைகாவுக்குத திருமணம் நடந்ததையும், குழந்தைகள் பிறந்ததையும் ஏற்றுக் கொள்வோமாக! நபி யூசுபை அவரது பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு பாழுங் கிணற்றில் தள்ளப்பட்டபோது அவர்களின் வயது 17-18 என்றும், 12ஆண்டுகள் சிறைப் பட்டிருந்தார்களென்றும், 30 வயதில் மிசுரின் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, 43-44 வயதில் திரும்பத் தம் பெற்றோரைச் சந்தித்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அவர்களோடு சிறைப்பட்டிருந்தவன் விடுதலையானபோது, தன்னைப் பற்றி மன்னனிடம்கூறி தன் களங்கத்தை நீக்கும்படி யூசுப் வேண்டியதையும், "அப்படியே சொல்வேன், அஞ்சிடாதீர்!" என்று அவன் உறுதிமொழி கூறிச் சென்றபடி அவன் சொல்லியிருந்தால் (இயல் 40 பார்க்கவும்) ஐந்தாண்டு சிறைவாசத்தோடு அவர் விடுதலை பெற்றிருக்க முடியுமென்றும் சொல்கின்றனர். நபியூசுப் தன் விடுதலைக்கு உதவ இறைவனிடம் முறையிடாமல் சக கைதியிடம் உதவி கோரிய குற்றத்திற்காகவே மேலும் ஏழாண்டுகள் அவர் சிறைவாசம் செய்ய நேர்ந்தது என்கின்றனர். |