பக்கம் எண் :

51


உன்னதம் மிகுந்த இன்னுயிர்ப் பொருளாய்ப்

பன்னெடுங் காலம் பாதுகாத் திருந்தேன்.

என்றும் போல இன்றதைக் காணச்

சென்றேன் பேழை திறந்து கிடக்கக்

கண்டேன் கலங்கினேன்; கள்வன் எவனோ

கொண்டே சென்றனன்; கொள்ளை கொடுத்தேன்!

அடுத்த வீட்டார் அத்தனை பேரிலும்

எடுத்தவர் யாரும் இருக்கலா மென்று

சோதனை செய்து சோர்ந்த போதில்

பாதகச் செயலைப் பண்ணிடும் வாய்ப்பே

என்னிட மிருந்த உனக்கே உண்டெனும்

எண்ணம் எழுந்ததால்; உன்னிடம் வந்தேன்!

 

எடுத்தது நீயெனில் என்னிடம் அதனைக்

கொடுத்திட வேண்டும்; கொடுக்கா திருந்தால்

விடுத்திட மாட்டேன்!’ விருப்பமாய் உன்னை

எடுத்து வளர்த்தேன், அடுத்துக் கெடுத்தாய்!

எடடா அதனை!" என்று யூசுபை

எட்டிப் பிடித்தாள், யாக்கூப் தடுத்தார்!

 

"கள்ளமே அறியாக் கண்மணி யூசுபைக்

கள்வனாய்க் கருதிடும் உள்ளமும் வந்ததோ?

 

படைத்தவன் ஆணையாய்ப் பகருவேன் என்மகன்

கிடைத்ததைச் சுருட்டிடும் கீழ்மகன் ஆவனோ?

சொல்வது முறையோ? சோதரி!" என்றார்,

"உன்மகன் என்பதால் ஒருபிழை புரிந்திடான்

என்பதைச் சொல்லும் நீர் இஸ்ஹாக் திருமகள்

சொல்லுவாள் பொய்’யெனச் சொல்லவும் துணிவதோ

நல்லதும் அல்லதும் எள்ளள வாயினும்

அறிந்திடா யூசுபின் ஆடைகள் பெட்டியைத்