பக்கம் எண் :

56


கதிரவன் காட்டிய நாடு

இயல்-11

 

கடலினில் பிறந்து மலையினில் வளர்ந்து

     கானகம் வானகம் அலைந்தே

உடலினை வருத்தும் சோர்வினை மாற்றும்

     ஓய்வினை விரும்பிய கதிரோன்

இடம்பல நோக்கி மேற்குநா டதனை

     ஏற்றநல் லில்லமாய்த் தேர்ந்து

சுடர்விளக் கேற்றிச் சென்றனன். அதுதான்

     தோன்றலர் தைமூஸின் நாடு.

 

எத்தனை நாடு எத்தனை மன்னர்

     இத்தரை முழுவதி லிருந்தும்

அத்தனை நாடும் அரசையும் பார்த்தும்

     அனைத்திலும் சிறந்தபொன் னாடாய்

இத்தனை காலம் மேற்கு நாடதனை

     ஏற்றிடும் கதிரவன் பின்னே

பித்தனைப் போலோர் தினம்சென் றொருவன்

     பெருவியப் படைந்ததைச் சொல்வேன்!

 

கொடையினிற் சிறந்த குடிகளின் வளத்தைக்

     கூர்ந்திடும் போதினில் வண்ண

உடையணி பூண்டே உலவிடும் மாதர்

     உவகையில் உள்ளமே இழந்து

நடையினை நிறுத்திக் கடைவிழி சாய்த்து

     நடுத்தெரு நின்றனன், எதிரில்

படையணி வகுத்து வருவதைப் பார்த்துப்

     பாதைவிட் டொதுங்கினன் பயத்தால்