"மணிபதித்தப் பொன்மலராய் ஒளிர்ந்த நாளில் மனமகுடம் பதித்திடவே மறுத்து விட்டீர் இனிமைமிகு எழிற்கனியாய் இருந்த போது எனைப்புசிக்கத் தந்திட்டேன் வேண்டா மென்றீர்; பனிபடியாச் சருகாகி உதிரும் நாளில் பஞ்சணையில் நறுமலராய்ப் பரப்பிப் பார்க்கக் கனிவுடனே தனிமையினில் வந்தீர், அந்தக் கருணைக்கே காலடியில் வீழ்ந்தேன்!" என்றாள். "மணம்கொண்டோர் பெறுகின்ற உரிமை கொள்ள மஞ்சத்துக் கழைத்திட்டாய், மறுத்தே னென்று சினம்கொண்டே சிறை தந்தாய் அதையும் ஏற்றேன்; திருமணத்தால் இருவருமே சேர்ந்த பின்னர் மணம்பெற்று மகிழ்வுற்று நெடுநாள் காத்த மாசற்ற வாழ்வினுக்கு மஞ்சம் வந்தோம் எனைக்கண்டு நடுங்குவதேன் சுலைகா?" என்று இறுகணைத்து யூசுபே கேட்க லானார். "பசிமிகுந்த வேளையிலே புசிக்கக் கேட்டேன் பாபமென்று நோன்பிருக்கப் பயிற்று வித்தீர், பசிகுறைந்த வேளையிலே பழமும் பாலும் பரிவுடனே ஊட்டுகின்ற இரக்கம் கொண்டீர்; இசைகுலைந்த கவிதையென உணர்வு குன்றி இனிமைதரும் இளமைஎழில் இழந்த பின்னே வசைக்கஞ்சி வந்துள்ளேன், அவற்றை மீண்டும் வழங்குதற்கு இயன்றிடுமா சொல்வீர்!" என்றாள். "உன்னிளமைப் பேரெழிலே ஒழிந்த தென்று உரைத்த தெவர் கூறிடுக!" என்றார் யூசுப், "என்னிளமை குன்றியதை எனக்குச் சொல்ல இன்னொருவர் தேவையிலை!’ என்று சொன்னாள், ‘தன்னிளமை போனதென எந்தப் பெண்ணும் சாற்றுவளோ?’ எனக்கேட்டார், ‘அந்த நாளில் இன்றிருக்கும் நிலையினிலா இருந்தேன்? உண்மை இயம்பிடுக!’ என்றழுதாள், வியந்தார் யூசுப். |