இறைவனை வேண்டல் : துய்யனே இறைவ னேஎன் துயர்முகம் கண்ட பின்னும் ஐயனே, அழக னேஎன் அன்பதைச் சொன்ன பின்னும் பொய்யனாய் மறைந்தே என்றன் புலனெலாம் துடிக்கச் செய்து மெய்யனே காதல் நெஞ்சம் வெந்திடச் செய்வ தென்னே? தோழியர்க்குச் சொல்லல் : சேடியே அவனே இங்கென் திருமுகம் காண வந்தான்; ஓடியே காலில் வீழ்ந்தே உவந்திட வேண்டி நின்றேன்; "கூடியே வாழ்வோ" மென்று கூறினான் மகிழ்வு கொண்டேன்; வாடியே தவிக்க விட்டே ஓடியே மறைந்திட் டானே! சொன்னதும் செய்ததும் : "உறுதியில் நிலைக்க"ச் சொல்லி ‘உணர்ச்சியை அடக்கி’க்கூற ‘இறுதியில் உனக்கு நானாய் எனக்குநீ யாவாய்’ என்று குருதியில் ஆசைத் தீயைக் காழுந்திடத் தூண்டி விட்டுச் சுருதிசெய் இதய யாழின் நரம்பையும் சுண்டிச் சென்றான். |