|
எம
எம்பார் :
இவர், ஸ்ரீபெரும்பூதூருக்கு அண்மையிலுள்ள மழலைமங்கலம்
என்ற தலத்தில் இராமாநுசருடைய சிற்றன்னையாரான பெரிய பிராட்டியார் என்பவருக்குப் புதல்வராய்
அவதரித்தவர்; பெரிய திருமலை நம்பிகட்கு மருகர்; கோவிந்தப்பெருமாள் என்பது இவருடைய திருப்பெயர்.
இவர் இளம்பருவத்தில் இராமாநுசரோடு சேர்ந்து யாதவப்பிரகாசரிடம் வேதாந்த பாடம் கேட்டவர்;
அக்காலத்து நிகழ்ந்து ஒரு நிகழ்ச்சியால் திருக்காளத்தி மலையிலுள்ள சிவபெருமானுக்கு அணுக்கத்தொண்டராய்ச்
சில காலமிருந்தவர்; பின்னர், பெரியதிருமலை நம்பியால் திருத்திப் பணிகொள்ளப் பட்டவர்;
பின்னர், இராமாநுசருடைய வேண்டுகோளின்படி உதகதாரா பூர்வமாகப் பெரியதிருமலை நம்பியால் இராமாநுசருக்குக்
கொடுக்கப்பட்டவர்; அது முதல், இராமாநுசர் மெய்யில் பிறங்கிய சீரும் அவர் குணானுபவமுமே காலக்ஷேபமாகச்
செல்லாநிற்க, ‘மாகாந்த நாரணனார் வைகும் வகையறிந்தோர்க்கு, ஏகாந்தமில்லை இருளில்லை’ என்கிறபடியே,
வாழ்க்கை நடத்தி வந்தவர்; இராமாநுசருடைய திருவடி நிழலைப்போன்று அவரை நீங்காது சார்ந்து நிற்பவர்.
இராமாநுசர் இவருடைய வைராக்கியத்தைக் கண்டு, இவர்க்குச் சந்நியாச ஆச்சிரமத்தைத் தந்தருளித்
தமது திருப்பெயர்களுள் ஒன்றான ‘எம்பெருமானார்’ என்ற பெயரை இவருக்குச் சார்த்த, இவர் அப்பெரும்பெயரைத்
தாம் தாங்க விரும்பாதவராய்த் ‘தேவரீருக்குப் பாதச்சாயையாயிருக்கிற அடியேனுக்குத் தேவரீர் திருநாமச்சாயையே
அமையும்’ என்று விண்ணப்பஞ்செய்ய, இராமாநுசரும் அப்பெயரைச் சிதைத்து, ‘எம்பார்’ என்று பெயரிட்டருளினார்.
அது முதல் ‘எம்பார்’ என்ற திருப்பெயரே இவருக்கு வழங்கிவரலாயிற்று. இராமாநுசருடைய நியமனத்தின்படி
சென்று பட்டர்க்குத் துவய உபதேசஞ்செய்து, ஆசாரியராகி அவர்க்குப் பஞ்ச சம்ஸ்காரங்களையும் திருவாய்மொழி
முதலிய கிரந்தங்களையும் அவற்றின் வியாக்கியானங்களையும் அருளினவர்.
எம்பெருமானார்
: இவர்
ஸ்ரீபெரும்பூதூரிலே ஆசூரிவமிசத்திலே சித்திரை மாதத்திலே திருவாதிரை நக்ஷத்திரத்தில் கேசவப்
பெருமாள் தீக்ஷிதருக்கும் ஸ்ரீ பூமிப்பிராட்டியார் என்னும் காந்திமதியம்மையாருக்கும் புதல்வராய்த்
தோன்றினார். இவர் பிறந்த பன்னிரண்டாநாள், மாதுலரான பெரியதிருமலை நம்பிகள் இவருக்கு
‘இளையாழ்வார்’ என்ற திருப்பெயரைச் சூட்டினர். ‘எம்பெருமானார்’ என்பது ஆசாரியரான
திருக்கோட்டியூர் நம்பிகளால் வைக்கப்பட்ட
|