பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

1க

130

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

1காரார் கருமுகில் போல் - என்னுடைய கலவி ‘பெறாப்பேறு’ என்னும் இடம் தன் வடிவிலே தோன்ற இராநின்றான். கார்காலத்தில் எழுந்த கருமுகில் போல’ என்னுதல்; கார்  என்று கருமையாய், ‘கருமை மிக்க முகில்’ என்னுதல். இனி, ‘இவ்வடிவையுடையவன் அன்றோ என்னோடே வந்து கலந்தான்?’ என்கிறார் எனலுமாம். என் அம்மான் கண்ணனுக்கு - அவ்வடிவழகாலே என்னை எழுதிக் கொண்ட கிருஷ்ணனுக்கு, செம்பவளம் வாய் நேரா - சிவந்த பவளம் திரு அதரத்துக்கு ஒப்பாகாது. ‘பவளமாயின் சிவந்தன்றோ இருப்பது? ‘செம்பவளம்’ என்றது என் கருதி?’ எனின், 2‘பவளத்தை ஸ்படிகத்தின் தானத்திலேயே வைத்து, அதற்குமேல் சிவந்த பவளத்தை உண்டாக்கினால், அப்படி உண்டாக்கிய சிவந்த பவளமும் 3சாதியாக ஒப்பாகாது’ என்பதனைத் தெரிவித்தபடி.

    கண் பாதம் கை கமலம் நேரா - குளிர நோக்கின கண், நோக்குக்குத் தோற்று விழும் திருவடிகள், திருவடிகளிலே விழுந்தாரை எடுத்து அணைக்கும் கை; இவற்றுக்குத் தாமரை சாதியாக ஒப்பு ஆகா. பேர் ஆரம் -4‘பெரிய வரை மார்பிற்பேர் ஆரம்’ என்கிறபடியே திருக்கழுத்துக்கு இருமடி இட்டுச் சாத்த வேண்டும்படியான ஆரம். நீள் முடி - ஆதிராஜ்ய சூசகமான திருமுடி. நாண் -5விடு நாண். பின்னும் இழை பலவே -‘ அனுபவித்துப் போம் இத்தனை ஒழிய, என்னாற்சொல்லித் தலைக்கட்டப்போமோ? முடியாது,’ என்றபடி.       

(5)

_____________________________________________________________

1. ’கார் ஆர் கருமுகில் போல்’ என்பதற்கு இருபொருள் அருளிச் செய்கிறார். ஒன்று,
  ‘என்னுடைய சேர்க்கையாலே காரார் கருமுகில் ஆனான் ‘ என்பது; மற்றொன்று, ‘காரார்
  கருமுகில் போன்றவன் என்னுடன் கலந்தான்’ என்பது.

2. இதனைச் ‘செஞ்ஞாயிறு’ என்பது போன்று இயற்கையடைமொழியாகக் கோடலும்
  அமையும்.

  ‘இனச்சுட்டு இல்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
  வழக்காறு அல்ல செய்யுளாறே.’

  என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்.

3. ‘சாதியாக ஒப்பாகாது’ என்றது, ‘சாதிக்குள்ளே ஒரு பொருளும் ஒப்பாகாது’ என்றபடி.

4. மூன்றாந்திருவந். 55.

5. விடுநாண் - அரைஞாண்.