மூன
மூன்றாந்திருவாய்மொழி -
‘ஒழிவில் காலம்’
முன்னுரை
ஈடு :
‘நிலைப்பெற்று என்னெஞ்சம்
பெற்றது நீடு உயிர்’ என்று அவனைக் கிட்டித் 1தம்முடைய சொரூபம் பெற்றவாறே, சொரூபத்திற்குத்
தகுதியான அடிமை பெறவேணும் என்று 2பாரிக்கிறார் இத்திருவாய்மொழியில். 3பிரகிருதி
சம்பந்தத்தால் வந்த கரணங்களின் குறைவை அநுசந்தித்து நினைத்த வகைகளெல்லாம் பரிமாறப் பெறாமையாலே
நொந்து, ‘இறைவன் முதலிலே இதனைத் தவிர்த்துத் தன்னையனுபவித்தற்கு உறுப்பாகப் பல உபாயங்களைப்
பாரித்து வைத்தான்; அவற்றிற்குத் தப்பினேன்; அவதாரங்களுக்குத் தப்பினேன்; உயிருக்குள் உயிராயிருக்கும்
தன்மைக்குத் தப்பினேன்; இப்படி அவன் பாரித்து வைத்த வழிகள் முழுதிற்கும் தப்பின யான்,
4இனிக் கிட்டி அனுபவித்தல் என்று ஒரு பொருள் உண்டோ? இழந்தேனேயன்றோ!’ என்று
ஆசையற்றவராய் முடியப் புக, ‘வாரீர் ஆழ்வீர்! நாம் உமக்காக அன்றோ திருமலையில் வந்து நிற்கிறது?
உம்மை இவ்வுடம்போடே அனுபவிக்கைக்காக இங்கே வந்து நின்றோமே! நீர் 5அங்குச்
சென்று காணக்கூடிய காட்சியை நாம் இங்கே வந்து
___________________________________________________
1. ‘தம்முடைய சொரூபம்’
என்றது, சேஷத்துவத்தோடு கூடின சொரூபத்தை.
2. பாரித்தல் -
விரும்புதல்.
‘வாரிக்கொண்டு
உன்னை விழுங்குவன் காணிலென்று
ஆர்வுற்ற என்னை
யொழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான்
என்னை முற்றப் பருகினான்’
என்பது, இவருடைய திருவாக்கு.
(9. 6 : 10)
3. ‘பிரகிருதி சம்பந்தத்தால்’
என்றது முதல், ‘முடியப்புக’ என்றது முடிய, மேல்
திருவாய்மொழியின் அநுவாதம்.
4. மேல் திருவாய்மொழியில்
‘கூவிக் கூவி’ என்ற பாசுரத்தைக் கடாக்ஷித்து,
‘இனிக் கிட்டி அனுபவித்தல் என்று ஒரு பொருள் உண்டோ?’
என்கிறார்.
5. அங்குச் சென்று
- பரமபதத்திலே சென்று.
|