பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
359

    என் கை இருந்து- 1“சுகதுக்கங்கள் நம் இருவர்க்கும் ஒன்றே” என்று, ஒத்த சுகதுக்கங்களையுடையவர்களாய் இருந்தார்களேயாகிலும் பசித்தாரே உண்ணவேணும் அன்றோ! அப்படியே, அவர்கள் ஓலக்கமிருக்குமத்தனை; இருப்பிடம் என் கையாகவேணும். 2அவன் திருமுடிக்கு ஆபரணமான என்னுடைய கையை உங்களுக்குப் பாதபீடம் ஆக்குகிறேன். 3“கிருஷ்ணனுடைய தோளில் கொடிபோன்ற தனது கையைக் கொடுத்தாள்” என்னுமாறு போலே, அவனுக்கு எல்லாப்பொருள்களையும் கொடுக்கும் கை. 4பரியங்க வித்யையிற் சொல்லும் படுக்கையிலே இருப்புப் போலும் அன்றே, இவள் கையில் இருப்பு. 5இவள் “அணி மிகு தாமரைக் கை” என்னுமது அவனுக்கும் உண்டே அன்றோ. மெய் அமர்

 

1. “என் கை இருந்து” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘சுகதுக்கங்கள்’
  என்று தொடங்கி.

  “ஏகம் துக்கம் சுகம்ச நௌ” என்பது, ஸ்ரீராமா. கிஷ்கிந். 5 : 18.

  என்றஅக் குரக்கு வேந்தை இராமனும் இரங்கி நோக்கி
  உன்றனக் குரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்னாள்
  சென்றன போக்கி மேல்வந் துறுவன தீர்ப்பல் அன்ன
  நின்றன எனக்கு நிற்கு நேரென மொழியும் நேரா.

  என்பது, கம்பராமாயணம், மராமரப்படலம், 64.

2. “என் கை” என்று விசேடிப்பது எற்றிற்கு? அல்லாதார் கைகளைக்
  காட்டிலும் இவள் கைக்கு ஏற்றம் யாது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘அவன் திருமுடிக்கு’ என்று தொட்ங்கி.

3. அவன் சிரசாவஹிக்கும்படி விரும்பத் தக்கதாக இருக்குமோ? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கிருஷ்ணனுடைய’ என்று தொடங்கி.

  “ததௌ பாஹு லதாம் ஸ்கந்தே கோபீ மதுநிகாதிந:”

  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13. 54. என்றது, வைத்தால் என்னாமல்,
  “ததௌ” என்கையாலே, பலகாலம் ஆசைப்பட்டவனுக்கு எல்லாச்
  சொத்துக்களையும் தானம் செய்தாள் என்பது போதரும்.

4. “என்கையிருந்து” என்று, இவற்றுக்கு, இதனை பெரிய பிரயோஜனமாகச்
  சொன்னதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் பரியங்கவித்யை’ என்று
  தொடங்கி. திருவாய்மொழி 2-ம் பத்து, 8-ஆம் திருவாய்மொழி, முதல்
  பாசுரம் வியாக்கியானம் பார்க்கவும்.

5. “அணிமிகு தாமரைக்கை” என்கிறபடியே, அவன் கை அன்றோ இவளுக்கு
  ஆபரணம்; இவள் கை அவன் தலைக்கு ஆபரணமாமோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘இவள்’ என்று தொடங்கி. என்றது, “அணிமிகு
  தாமரைக்கை” என்கிற பாசுரத்திலே அவன் கையைத் தன் தலைக்கு
  ஆபரணமாக பிரார்த்தித்தால், அவனும் இவள் கையைத் தன் திருமுடிக்கு
  ஆபரணமாகப் பிரார்த்திக்கும் என்னுமது பொருளாற்றலால் போதரும்
  என்றபடி.