பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஐந

ஐந்தாந்திருவாய்மொழி-‘கற்பார்’

முன்னரை

    ஈடு : 1மேல் திருவாய்மொழியிலே, எம்பெருமானுடைய வெற்றிச் செயல்களை அனுபவித்தார்; அவைதாம் அடியார்களின் பொருட்டே அன்றோ இருப்பன? ‘அவன், தன்னை இவர்களுக்கு ஆக்கி வைக்கக, இவர்கள் புறம்பு உண்டான விஷயங்களிலே வேறு நோக்குள்ளவர்களை ஆவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார். 2‘யஸ்ய அஸ்மி -எவனுக்கு அடியவனாகிறேன்?’ என்கிறபடியே, யாவன் ஒருவனுடைய சத்தையே பிடித்து அவனுக்காய் இருக்கும்? அப்படி இருக்கிறவன் தான் 3பிறந்தது தொடங்கி இவனுக்கு ஆக்கி வைக்கிறான் அன்றோ? பாதுகாப்பதற்கே உரியனவான பிறவிகளிலே வந்து பிறந்த படியையும், தன் சொரூபம் ரூபம் குணம் முதலானவைகளையும் பிறர்க்கு ஆக்கி வைக்கிறபடியையும், அதற்குக் காரணமான கிருபையைத் தனக்கு வடிவாகவுடைனாய் இருக்கிறபடியையும், கிருபையின் காரியமான செயல்களையும் நினைத்து, முற்றத்திலே பொற்குவியல் புைதைந்து கிடக்க, அதனை அறியாதே மேலே சஞ்சரித்துப் புறங்கால் வீங்குவாரைப் போலே இச்செல்வம் தங்களுக்காக இருக்கச் சம்சாரிகள் புறம்பே போது போக்குவதே!’ என்று ஆச்சரியப்படுகிறார்.

_____________________________________________________________________

1. மேல் திருவாய்மொழிக்கும் இந்தத் திருவாய்மொழிக்கும் சுருக்கமாக இயைபு
  அருளிச்செய்கிறார். இத்திருவாய்மொழியில் வருகிற ‘கற்பார் இராம பிரானை
  அல்லால் மற்றும் கற்பரோ?’, ‘நாரணற்கு ஆளன்றி ஆவரோ?’, ‘கேசவன்
  கீர்த்தியல்லால் மற்றும் மேட்பரோ?’ என்பனு போன்றவைகளைக் கடாட்சித்து,
  ‘இவர்கள்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

2. ‘தன்னை இவர்களுக்கு ஆக்கி வைக்கை’ என்றால், ‘அவனுடைய உண்மைத்தன்மை
  யாது?’ என்ற சங்கையிலே மேற்கூறிய இயைபினை விரித்து அருளிச்செய்கிறார்,
  ‘யஸ்ய’ என்று தொடங்கி. சத்தை - இருப்பு.

3. இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘நாட்டிற்பிறந்து’ என்பது போன்றவைகளைக்
  கடாட்சித்து ‘பாதுகாப்பதற்கே’ என்று தொடங்கியும், ‘பிரான்’ என்றதனைத்
  திருவுள்ளம் பற்றித் ‘தன் சொரூபம்’ என்று தொடங்கியும், ‘தன்மையறிபவர்’
  என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘அதற்குக் காரணமான’ என்று தொடங்கியும்,
  ‘புற்பா முதலா’ என்பது போன்றவைகளைத் திருவுள்ளம் பற்றி, ‘கிருபையின்
  காரியமான’ என்று தொடங்கியும் அருளிச்செய்கிறார்.