பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஒன்பதாந்திருவாய்மொழி - பா. 1

345

தகுதியான ஞானத்தாலும் சத்தியாலும் குறைவற்ற ஸ்ரீவேதவியாச பகவான், ஸ்ரீவால்மீகி பகவான் ஸ்ரீபராசர பகவான் தொடக்கமானார், 1‘செந்தமிழ் பாடுவார்’ என்று சொல்லப்படுகிற முதலாழ்வார்கள், இவர்கள் எல்லாரும் உண்டாயிருக்க, அநாதிகாலம் சம்சாரத்திலே பழகி ஐம்புல இன்பங்களிலே ஈடுபட்டவனாய், 2‘அவன் இல்லாதவன் ஆகவே ஆகிறான்’ என்கிறபடியே அசத்தைப் போன்றவனாய் உருமாய்ந்து போன என்னைக்கொண்டு தனக்குத் தகுதியாகக் கவி பாடுவித்துக்கொள்ளவதாகச் சொன்ன வார்த்தை என்ன வார்த்தை! இது ஒரு நீர்மை இருக்கும்படியே! இது என்ன நீர்மை!’ என்று, சர்வேஸ்வரன் தம் திறத்தில் செய்த உபகாரத்தை அநுசந்தித்து, அதற்கு ஒரு பிரதியுபகாரம் காணாமையாலே தடுமாறிச் சொல்லுகிறது. 

                      751

        என்றைக்கும் என்னைஉய் யக்கொண்டு போகிய
        அன்றைக்குஅன்று என்னைத்தன் னாக்கிஎன் னால்தன்னை
        இன்தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
        நின்றஎன் சோதியை என்சொல்லி நிற்பனோ?

    பொ - ரை : காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் உஜ்ஜீவிக்கத் தகுதியாம்படி அங்கீகரித்துக் கழிகிற நாள்கள்தோறும் என்னைத் தனக்கு அடிமை ஆக்கி, என்னால் தன்னை இனிய தமிழ்ப் பாசுரங்களைப் பாடுவித்துக் கொண்ட ஈசனை, காரணமாய் நின்ற என் சோதியை என்ன என்று சொல்லித் தரிப்பேன்?

    வி - கு :
பாடிய-பாடுவித்துக்கொண்ட. இத்திருவாய்மொழி, கலிவிருத்தம்.

    ஈடு :
முதற்பாட்டு. 3‘மிகச்சிறியேனான என்னை ஞானம் சத்தி முதலியவைகளையுடையேனாம்படி செய்து, என்னையிட்டுத்

_______________________________________________________________

1. ‘செந்தமிழ் பாடுவார்’ என்பது, பெரிய திருமொழி, 2. 8 : 2.
 
2. இத்திருவாய்மொழியில் வருகிற ‘என் இன்னுயிர் இன்று ஒன்றாய்’
  என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘அவன்’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார். ‘அஸந்நேவ ஸ பவதி அஸத் ப்ரஹ்மேதி வேத சேத்’
  என்பது, தைத்திரீய. ஆன. 6.

3. ‘என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன்தமிழ் பாடிய ஈசனை,
  என்சொல்லி நிற்பன்?’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.