பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

முதல் திருவாய்மொழி - பா. 11

43

    பொ-ரை: குணங்களைக் கொண்ட மூர்த்தி மூவராய்ப் படைத்துக் காப்பாற்றி அழிக்கின்ற, அந்தத் திருவுந்தித்தாமரையையுடைய, தண்ணீரிலே திருக்கண்வளர்கின்ற அப்பனுக்குத் தொண்டுபட்டவர்களுக்குத் தொண்டுபட்டவரான ஸ்ரீ சடகோபராலே சொல்லப்பட்ட ஆயிரத்துன் இந்தப் பத்தையும் பொருளைக் கொண்டு பாட வல்லவர்களுடைய வினைகள் எப்பொழுதும் நீங்காநிற்கும்.

    வி-கு:
‘குணங்கள் கொண்ட மூர்த்தி மூவர்’ என்க. கெடுத்தல்-அழித்தல். புண்டரிகம்-தாமரை. ‘கங்குலும் பகலும் வினைபோம்’ என்க.

    ஈடு: முடிவில், 1‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்கட்கு இந்திரியங்களால் ஆத்துமாவுக்கு வரும் நலிவு போம்,’ என்கிறார்.

    குணங்கள் கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்- 2சத்துவம் முதலான குணங்களுக்குத் தகுதியான வடிவையுடைய மூவராய். 3குணங்கட்குத் தகுதியான படைத்தல் முதலிய தொழில்கள் அந்த அந்த உருவந்தோறும் நிறைந்திருக்குமன்றோ? 4பிரமன் சிவன் என்னும் இரண்டு உருவங்களிலும் சீவனுக்குள் அந்தர்யாமியாய் நின்று, விஷ்ணு உருவத்தில் தானே நின்றபடி. படைத்து அளித்துக்கெடுக்கும் -5ரஜோகுணத்தையுடையனாய்க்கொண்டு படைத்து, தமோ குணத்தையுடையனாய்க்கொண்டு அழித்து, சத்துவ குணத்தையுடையனாய்க்கொண்டு இவற்றை அடையக் காத்துக் கொடு நிற்கிறபடி. அப்புண்டரிகக் கொப்புழ்ப் புனல் பள்ளி அப்பனுக்கு-இவை எல்லாவற்றையும் உண்டாக்குகைக்காக ஏகார்ண

__________________________________________________________________

1. ‘கண்டு பாட வல்லார், கங்குலும் பகல் வினை போம்’ என்றதனைக் கடாட்சித்து
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ‘சத்துவம் முதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட்கு அவற்றால்
  மூவராகிய முதற்கடவுளரொடு இயைபுண்டாகலான்’ என்பது பரிமேலழகருரை.
  (திருக்குறள் கடவுள் வாழ்த்து)

3. ‘‘படைத்து அளித்துக் கெடுக்கும்’ என்று பொதுவாகச் சொன்னால், இன்ன தொழிற்கு
  இன்னார் என்று அறியும்படி யாங்ஙனம்?’ என்ன, ‘குணங்கட்குத் தகுதியான’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

4. ‘தானே மூவர் ஆனானோ?’ என்னில், ‘பிரமன் சிவன்’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார்,

5. ‘குணங்கட்குத் தகுதியான’ என்று தொடங்கி மேலே கூறிய வாக்கியத்தை விவரணம்
  செய்கிறார், ‘ரஜோகுணத்தையுடையனாய்’ என்று தொடங்கி.