என்று சொல்ல சோழனும் அவ்வாறாயின் உண்மை நிலையைச் சென்று கண்டு வருக என்று படைத் தளபதியை அனுப்ப, வேகவதி ஆற்றங்கரையில் பெரும் புதையலைக் காட்டி கப்பம் தீர்த்தார். இங்ஙனம் பஞ்ச ஸமஸ்காரம் செய்துவித்தது மட்டுமின்றி ததியாராதனத்திற்கும் திருநறையூரானே வழிவகுத்தான். 11) இவ்வூரில் வாழ்ந்த ஒரு வைதீகப் பிரம்மச்சாரிக்கு 108 திவ்ய தேசங்களை காணவேண்டும் என்ற பேராவல் இருந்தது. ஆனால் காலச் சூழ்நிலையால் அது இயலவில்லை. 108 எம்பெருமான்களையும் சேவிக்க வேண்டுமென தினந்தோறும் இப்பெருமானை கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டார். இந்த பக்தருக்காக அவரது கனவில் திருநறையூர் ஸ்ரீனிவாசனே நேரில் வந்து 108 திவ்யதேசத்து எம் பெருமான்களின் விக்கிரகங்களைக் கொடுத்ததாகவும், நெடுங்காலம் தமது இல்லத்தில் வைத்து பூஜித்த இவைகளை தமது அந்திம காலத்தில் இத்தலத்தில் ஒப்படைத்ததாகவும் கூறுவர். இந்த 108 திவ்யதேசத்து எம்பெருமானின் விக்ரகங்களை இத்தலத்தில் இன்றும் காணலாம். 12) இத்தலம் திருமடல் பரிசு பெற்ற ஸ்தலம் என்றும் கொள்ளலாம். அதாவது மடலேறுதல் என்பது சங்க காலத்து பழந்தமிழர் பண்பாடு. சங்க காலக் காதலில் தலைவியை அடையமுடியாத தலைவன் தான் தலைவியின் பால் கொண்டுள்ள காதலை உலகறியச் செய்வதற்காக பனை மடலால் ஒரு குதிரை செய்து தன் காதலியின் உருவத்தை ஒரு கொடியில் வரைந்து அதை ஒரு கையில் தாங்கிக் கொண்டு எருக்கம் பூ மாலையணிந்து தலைமயிரை விரித்துக் கொண்டு, இவள் தான் என்னைக்கைவிட்ட இரக்கமில்லாதவள் என்று கண்ணீர் சிந்திக்கதறியழுது அக்குதிரை மீதேறி தெருவில் வலம் வருதலாகும். தன்னை நாயகியாகப் பாவித்து, எம்பெருமானை நாயகனாகப் பாவித்துக் கொண்ட திருமங்கை, தனக்கு எம்பெருமான் முகங்காட்டாதேயிருப்பின் தான் மடலூர்வன் என்கிறார். எம்பெருமான் மீது கொண்ட காதலை வெளிப்படுத்த மடல்விடுத்தார் திருமங்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல் என்னும் இரு மடல் விடுத்தார். இரண்டு திருமடல்களிலும் எம்பெருமான் எழுந்தருளியுள்ள பல திவ்யதேசங்களை திருமங்கையாழ்வார் குறிக்கிறா |