பக்கம் எண் :

150

வேண்ட அவ்விதமே மோட்சமளித்து, அவனுக்கு காட்சி கொடுத்த
சௌந்தர்யமான திருக்கோலத்திலேயே இவ்விடம் காட்சி தருகிறார்.

     இக்கலியுகத்திலேயே பக்தியில் சிறந்த சாலிசுகன் என்னும் சோழன்
இப்பெருமானை வழிபட்டு வந்தான். ஒரு நாள் அம்மன்னன் இவ்வனத்தில்
உள்ள ஒரு சுருங்கை (சுரங்கம் அல்லது குகை) வழியே வந்து போகும் மூன்று
கொங்கைகளோடு கூடிய ஒரு பெண்ணைக் கண்டான். இம்மன்னனின் பார்வை
பட்டதும் ஒரு கொங்கை மறைய அப்பெண்ணும் திகைத்து நின்று இவனைக்
காண ஒருவரையொருவர் காமுற்று காதல் கொண்டு இப்பெருமான் மீது
பேரன்பு கொண்டு நித்ய கைங்கர்யங்கள் செய்து சிறந்த புத்திரப்
பேற்றினையும் பெற்று இப்பெருமானுக்கு பிர்ம்மோத்ஸ்வமும் நடத்தி
வைத்தார்கள்.

     இச்சாலிசுக சோழனை துந்துமான் என்று புராணங் கூற, தொண்டைமான்
என்று தமிழிலக்கியங்கள் பகர்கின்றன. மேற்சொன்ன வரலாற்றை (சாலிசுக
சோழன் கதையை) பெரும் பாணாற்றுப் படை நூலுக்கான
நச்சினார்க்கினியாரின் உரைநூலும் விளக்குகிறது.

மூலவர்

     நீலமேகப் பெருமாள் - கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

உற்சவர்

     சௌந்தர்ய ராஜன்

தாயார்

     சௌந்தர்ய வல்லி

உற்சவர்

     கஜலெட்சுமி

தீர்த்தம்

     ஸாரபுஷ்கரிணி

விமானம்

     சௌந்தர்ய விமானம் (பத்ரகோடி விமானம்)

காட்சி கண்டவர்கள்

     நாகராஜன் (ஆதிசேடன்) துருவன், திருமங்கை, சாலிசுக சோழன்