22. திருவெள்ளியங்குடி
ஒள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில் அள்ளியம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரியரி யென்றவை யழைப்ப வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளியங் குடியதுவே (1344) பெரியதிருமொழி 4-10-7 |
மாவலிச் சக்கரவர்த்தியிடம் வாமன அவதாரங்கொண்டு மூவடி
மண்வேண்டி உலகெல்லாம் அளந்து உயர்ந்து நின்ற பெருமாள், அழகிய
பொழிலிடை வாழக்கூடிய குயில்கள் ஹரி, ஹரியென்றழைக்கக் கூடிய
வெள்ளியங்குடியாகிய இத்திருத்தலத்தில் விரைந்து வந்து தன்னைக் குறித்து
தவமிருந்த (சுக்கிரனுக்கு) வெள்ளியாருக்கும் அருள் பாலித்தான் என்று
திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இவ்வெள்ளியங்குடிக்கு
கும்பகோணத்திலிருந்தே பேருந்து வசதியுள்ளது.
இது மிகச்சிறிய கிராமம். தங்கும் வசதிகள் இல்லை. கும்பகோணத்திலோ
அல்லது ஆடுதுறையிலோ தங்கியிருந்து கொண்டு இத்தலம் வந்துசேவித்துச்
செல்லலாம்.
வரலாறு.
இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும்
தகவல்களை அள்ளித் தருகிறது. இத்தலம் மிகவும் தொன்மையும், புகழும்
கொண்டது. திருவரங்கம், வேங்கடம் போன்ற ஸ்தலங்களைப் போல் நான்கு
யுகங்களிலும் வழிபடப்பட்டுள்ளது. நவக்கிரகங்களில் சுக்கிரனோடு தொடர்பு
கொண்டது. வாமன அவதாரக் கதையுடன் இணைந்து செல்லக்கூடியது.
இத்தலம்,
க்ருதே பிரம்மபுத்திரம் நாமா திரேதாயந்து பரா சரம் த்வாபரே சைந்திர நகரா கலௌ சேஷத்திரந்து பார்க்கவம் |