இவ்வாறு கூறியும் பெருமாள் முகங்கொடுக்காதிருக்கவே, சரி, ஆசைப்பட்ட அடியவர்கட்கு ஆராவமுதமாக இருப்பது அர்ச்சாவதார மொன்றுதான். அதனையும் காண்பிக்க இஷ்டமில்லை யாயின் நீரே அதனைக் கட்டிக்கொண்டு வாழுமய்யா - நாங்கள் எப்படியும் போகிறோம் என்று. வாசி வல்லீர் இந்தளூரீர் வாழந்தேபோம்நீரே - என்றார் (இப்போது தலைப்பில் உள்ள பாடலைப் பாருங்கள் பொருள் முற்றிலும் விளங்கும்) இவ்வாறு திருமங்கை மங்களாசாசனம் செய்து நிற்க இப்படியே விட்டால் எங்கே திருமங்கை போய்விடுவாரோ நமக்கும் பாசுரங் குறைந்து போகுமோ, பிறகு நின்றவூரானைப் போல நாமுஞ் சென்று நிற்க வேண்டி வந்துவிடுமோ என்றெண்ணிப் பெருமாள் மேலும் வாதம் செய்யத் தொடங்குகிறார். வாதம் வளர்ந்து பாசுரங்களை வாங்கிக்கொண்ட பின் பரகாலனுக்கு காட்சி தந்ததாக வரலாறு. 10 பாவிற்கும் இதேபோன்ற விளக்கம் எடுத்தாண்டால் நூலின் போக்கு வேறுதிக்கில் செல்லுமாதலால் இப்பாடலுக்கு உண்டானதை மட்டும் எடுத்தாண்டோம். இப்பெருமானைச் சென்று சேவிக்கும் கடமை நமக்கும் உண்டல்லவா? 5. நும்மடியோம், நுமக்கே என்பன போன்ற அழகு தமிழ்ச் சொற்களை திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் எடுத்தாண்டுள்ளனர். நம்மாழ்வார், “நுமக்கடிமை யென்றென்றே நொந்துரைத்தேன்”- 2593 என்று சொல்லியிருப்பதும் இங்கு பொருளமைதியில் மிகவும் வியந்து போற்றத்தக்கதாகும். |