பக்கம் எண் :

184

திருநாங்கூர் 11 திவ்ய தேசம்

     சோழநாட்டுத் திருப்பதிகளுள் திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும்
ஆறு திவ்ய தேசம் உள்ளது. இவ்வூரைச் சுற்றி சுமார் 1/2, 1, 1 1/2 மைல்
தூரங்களில் உள்ள 5 திவ்ய தேசங்களையும் சேர்த்து திருநாங்கூர் பதினொரு
திவ்ய தேசம் என்றே வழங்குவர்.

     ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில்
நடைபெறும் கருட சேவைக்கு இந்த 11 பெருமாள்களும் எழுந்தருள்வர். இந்த
11 பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் வந்து ஒருவருக்கு அடுத்து
ஒருவராக மங்களாசாசனம் செய்வார். அதன்பின் திருமங்கையாழ்வாரை
மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வர். இந்த கண்கொள்ளா
காட்சியான கருட சேவையை காண்பதற்கு இந்தியா வெங்கிலும் உள்ள
பக்தர்கள் கூடுவர்.

     அந்த 11 திருப்பதிகள் விவரம்.

     1. திருக்காவளம்பாடி             இந்த 6
     2. திருஅரிமேய விண்ணகரம்      ஸ்தலங்களும்
     3. திருவண்புருடோத்தமம்         திருநாங்கூருக்
     4. திருச்செம்பொன் செய்கோவில்   குள்ளேயே
     5. திருமணிமாடக்கோவில்         இருக்கிறது.
     6. திருவைகுந்த விண்ணகரம்
     7. திருத்தேவனார்த் தொகை
     8. திருத்தெற்றியம்பலம்
     9. திருமணிக்கூடம்
     10. திருவெள்ளக்குளம்
     11. திருப்பார்த்தன் பள்ளி

     திருநாங்கூரில் 11 திவ்ய தேசங்கள் உண்டானமைக்கு பலவிதமான
கதைகள் உண்டு. இருப்பினும் (பாத்ம புராணத்தில்) கூறப்பட்டுள்ள கூற்றே
பிரதானமாக பேசப்படுகிறது. புரசங்காடு எனவும், பலாசவன சேத்திரம் எனவும்,
மதங்காச்சரமம் எனவும் நாகபுரி எனவும் பல பெயர்களில் வழங்கப்படும் இந்த
திருநாங்கூர் பகுதிக்கு உபய காவேரி மத்திமம் என்றும் ஒரு பெயர் உண்டு.
தெற்கே காவேரிக்கும் வடக்கே மண்ணியாறுக்கும் இடைப்பட்ட இப்பகுதி
உபயகாவேரி மத்திமம் ஆகும்.