திருநகரி இதன் தலவரலாறு கருட புராணத்தின் உத்ரகாண்டத்தில் ருத்ர நாரதிய சம்வாதமாக அமைந்துள்ளது. திருமங்கையாழ்வாரின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்ட திவ்ய தேசம். திருநகரி அமைந்துள்ள இடம் பில்வாரண்யம் என்று புராணம் கூறுகிறது. பில்வாரண்யத்தின் எல்லைகள் கீழ்க்கண்டவாறு பேசப்படுகிறது. காவிரிக்கு வடக்கு, நூபுர கங்கை என்னும் கொள்ளிடத்திற்கும் உரோமச ஷேத்ரமாகிய சீர்காழிக்கும் சமுத்திரத்திற்கும் மத்தியில் பில்வாரண்யம் அமைந்துள்ளது. காவேர்யாற்ச் சேத்தர தீரே நூபுராயஸ்ச தட்சிணே ரோமஸ் சோரு தன்வதார் மத்யே பில்வாரண்ய மிதிச்ருதம் பில்வ முலஸ்திதளொ பூத்வா நரசிம்மஸய சன்னிதென ஐ யேதஷ்டாஷரம் மந்தரம் மந்திரசித்தம் அவாப்துயாது என்பது கருட புராணம். | பில்வாரண்யம் அல்லது வில்வாரண்யம் என்று அழைக்கப்படும் இப்பகுதி பஞ்ச நரசிம்ம ஷேத்ரங்களுள் ஒன்றாகும். இங்கு யோக நரசிம்ம மூர்த்தி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். ஸ்ரீபுரி யென்றும் ஆலிங்கன புரி யென்றும் பில்வாரண்ய ஷேத்ரம் என்றும் இதற்குப் பெயர். வரலாறு கிரேதாயுகத்தில், பிரம்மாவின் 5வது புத்திரனான கர்த்தம பிரஜாபதி திருமாலின் ஸாயுஜ்யம் (மோட்சம்) வேண்டுமென இவ்விடத்து திருமாலைக்குறித்து கடுந்தவம் செய்தார். இவருக்கு அருள்வதில் எம்பெருமான் அதிகமான காலதாமதம் காட்டவே பக்தனுக்கு விரைவில் காட்சி கொடுக்க வேண்டும் என்று பிராட்டி எம்பெருமானை வேண்ட, அவரோ அதற்குச் சற்றும் செவி சாய்க்காவண்ணம் மேலும் பொறுமை காட்டி நின்றார். இதைக் கண்டு சினந்த பிராட்டி (பக்தனுக்கு அருள்வதில் தான் கொண்டுள்ள பரிவு என்னும் தாய் மனோபாவத்தில்) வைகுண்டத்தை விட்டு பூவுலகுவந்து இவ்விடத்து அமைந்திருந்த ஒரு அழகிய தாமரைப் பொய்கையில் ஒரு அழகிய தாமரை மலருக்குள் தன்னை மறைத்துக் கொள்ள திருமகள் இல்லாத வைகுந்தம் பொலிவு குன்றியது. |