பக்கம் எண் :

234

சிறப்புக்கள்

     1) திருமலையில் பெருமாளுக்குரிய திருநாமமான ஸ்ரீனிவாசன் என்பதும்
பிராட்டியின் திருநாமமான அலர்மேல் மங்கைத் தாயார் என்பதும். அதே
பெயர்களில் வழங்கும் இன்னொரு திவ்ய தேசம் 108 இல் இது ஒன்றுதான்.
வேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது ஐதீஹமாவதால்
திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு
மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதனைத் தென்திருப்பதி என்றும்
பகர்வர்.

     2) இந்த ஸ்வேத புஷ்கரணியில் உள்ள குமுத மலர்களைக் கொய்து
செல்ல தேவகுலப் பெண்கள் இங்குவருவது ஒரு காலத்தில்
வழக்கமாயிருந்ததாம். அவ்வாறு ஒரு சமயம் வந்த தேவகுலப்பெண்களில்
மானிடப் பார்வைக்கு இலக்காகி இங்கேயே நின்று விட்ட
குமுதவல்லியைத்தான் திருமங்கையாழ்வார் திருமணம் செய்ய விழைந்தார்.
எனவே இத்தலம் குமுதவல்லியாரின் அவதார ஸ்தலம் என்பதோடுமட்டுமின்றி
திருமங்கையாழ்வாரை இவ்வுலகிற்கு அளித்தமைக்கும் எல்லை நிலமாயிற்று.

     அதாவது நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாகத் திகழ்ந்த
திருமங்கை குமுதவல்லியைப் பற்றிக் கேள்விப்பட்டு பெண் கேட்டு வர,
குமுதவல்லியார் ஒவ்வொரு நிபந்தனையாக விதித்து நிபந்தனைகளை
நிறைவேற்றினால்தான் திருமணம் என்று சொல்ல இவரும் நிபந்தனைகளை
நிறைவேற்ற ஈடுபட்டு, இறுதியில் ஆழ்வாரானார். ஒரு மங்கையினால்
ஆழ்வாராக மாறினமையால் மங்கையாழ்வாராகி திருமங்கை ஆழ்வாரானார்.

     3) திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களால்
மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். பிள்ளைப் பெருமாளையங்காரும்
இத்தலம் பற்றி பாடியுள்ளார்.

     4) அழகிய மணவாள தாசருக்கு (மணவாள மாமுனிகட்கு) இறைவன்
இங்கு காட்சி கொடுத்ததாக ஐதீஹம். மணவாள மாமுனி எம்பெருமானைத்
தேட எம்பெருமான் மணவாள மாமுனியைத் தேட இருவரும் இங்குள்ள
தடாகத்தே சந்தித்து விடாய் தீர்த்தனர் என்பர்.