சித்ரகூடஞ் சிறந்தது. அந்தச் சித்திரக் கூடத்தில் திருவனந்தன் மேல் அறிதுயிலமர்ந்த தேவாதி தேவனை நானும் சிவபெருமானும் இந்திரனுள்ளிட்டோரும் போற்றி இஷ்டசித்திகள் பெற்றுள்ளோம். என்று பிரம்மன் நாரதருக்குச் சொல்கிறான் (பிர்ம்மாண்ட புராணம்) தகரவித்தை, மதுவித்தை, புருஷோத்தம வித்தை ஆகியன அகர வித்தைக்குள்ளேயடங்கும் (அகரவித்தையென்பது சிருஷ்டியின் தொடக்கத்தை உணர்த்துவது) அந்த அகர வித்தையின் சிகரத்திற்கு சிற்சபை எனப்பெயர். அதில் அட்டாக்கரப்படியின் (அஷ்டாச்சர மந்திரத்தின்) சிகரத்தில் எம்பெருமான் சயனங் கொண்டுள்ளார். (பிர்ம்மாண்ட புராணம்) கலிங்க நாட்டு மன்னன் கவேரன் என்பவனுக்கு நெடுங்காலம் புத்திரபாக்கியமின்றியிருக்க, கவேரனும் அவனது மனைவியும் கடுந்தவம் மேற்கொண்டு அதன் பயனால் காவேரியே அவர்களுக்கு குழந்தையாகப் பிறந்தாள். பிறகு காவேரி அகத்தியனால் நதியாக ஆன பின்பு காவேரியின் தாயும் தந்தையும் அதில் நீராட வரும்போது, உன்னைப்போல் நாங்களும் சாகா வரம் பெற்று எந்நாளும் வாழும் பேறு வேண்டுமென்று கேட்க அதற்கு வரமளிக்கும் சக்தி திருமால் ஒருவனுக்குத்தான் உண்டெனவும், எனவே அருகாமையில் இருக்கும் தில்லைவனஞ் சென்று கோவிந்தா, கோவிந்தா என்று கூறி தவமிருக்குமாறு காவேரி கூறியனுப்பினாள். அவ்வண்ணமே தவமிருக்க எம்பெருமான் பிரதயட்சமாகி அவ்விருவருக்கும் மோட்சமளித்தார். அஷ்டாச்சர மந்திரத்தை விட கோவிந்தா என்னும் நாமத்தால் இவ்விடத்தே பக்தர்கட்கு மோட்சம் கிட்டியமையால் எம்பிரானுக்கும் கோவிந்தராஜன் என்னும் திருநாமமே எல்லை கட்டி நின்றது. இஃதிவ்வாறிருக்க, பராசரன் என்னும் ஒரு முனிவர் திருமாலைக் குறித்து தவஞ் செய்கையில் தஞ்சகன், கஜமுகன், தண்டகாசுரன் என்னும் 3 அரக்கர்கள் அத்தவத்தைக் கலைக்க, முனிவரின் வேண்டுதலின்படி மகாவிஷ்ணு கருடப்பறவை மீதேறி வந்து தஞ்சகன், கஜமுகன் ஆகிய இருவரையும் சம்ஹாரம் செய்ய தண்டகாசுரன் மட்டும் அங்கிருந்த பிலத்தின் வழியாக ஓடி பாதாளத்தில் ஒளிய அவனைப் பின்தொடர்ந்த எம்பெருமான் தனது முகக்கோட்டால் அவனைக் கீறிக்கிழித்துப் போட்டு பாதாளத்திலிருந்து பூமியைப் பிளந்து கொண்டு (ஸ்ரீமுஷ்ணத்தில் பூமியைப் பிளந்து கொண்டு வந்த வராகனாக) பூவராகப் பெருமாளாக எழுந்தருளினார். (மூன்று அரக்கர்களை வதம் |