| செய்ததை தஞ்சை மாமணிக்கோயில் ஸ்தல வரலாற்றில் விரிவாய் காணலாம்) இவ்வரக்கர்களுக்கு சில்லி, தில்லி என்னும் இரு சகோதரிகள் இருந்தனர். அவ்விருவரும் தம் சகோதரர்களை சம்ஹாரம் செய்த பூவராகப் பெருமானை சரணடைந்து எங்களுக்கு நல்வழி காட்டுங்கள் என்று கேட்க, நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள் அவ்வண்ணமே தருகிறேன் என்றார் பூவராகன். சில்லியானவள் உமக்கே யான் காவல் பூணக் காத்துள்ளேன் என்று சொல்ல அவ்வண்ணமே ஆகுக என்று சொல்ல சில்லி ஸ்ரீமுஷ்ணத்தில் கோவிற்கடையில் காவல் காத்து வருகிறாள். தில்லி திருநாடு கேட்க, அவ்வண்ணமாயின் அருகில் உள்ள (இரண்டு யோசனை தூரமுள்ள) புண்டரீகபுரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி தன்னைக் குறித்து தவமிருக்குமாறு சொல்ல அவ்வண்ணமே செய்தாள். அவ்விடத்தே புள்ளேறி வந்த எம்பெருமானைத் தரிசித்த தில்லி தானும் தன் சகோதரியைப் போல எம்பெருமானின் வீட்டிடத்தே மரமாக இருப்பதாகச் சொல்ல எம்பெருமானும் சரியென்றார். (புண்டரீகபுரத்தைச் சுற்றி) தில்லி அழகான தில்லைக் காந்தார விருட்சமாக விரிந்து பரந்து நின்றாள். திருமால் தில்லைக் கோவிந்தனாகப் பள்ளி கொண்டார். இஃதிவ்வாறிருக்க பரமசிவனும் பார்வதியும் ஒரு சமயம் மிக்க மனக்களிப்புடன் ஒருவரையொருவர் விஞ்சி நடனம் புரிகையில் அங்கிருந்த முருக விநாயகரை நோக்கி யாரின் நடனம் சிறப்பாக இருந்தது என்று வினவ அவ்விருவருடன் அங்கு குழுமியிருந்தோறும் சேர்ந்து உமையவளின் நடனமே மிகவும் சிறந்ததாய் இருந்தது என்று கூற சிவன் மிகவும் கோபமுற்று நீவிர் இருவரும் சிறுவர்கள் உமக்குத் தீர்ப்புச் சொல்ல தகுதி போதாது என்று கூறி பிரம்மனிடம் சென்று நடந்த வ்ருந்தாந்தத்தைச் சொன்னார். உடனே பிரம்மன், அவ்வாறாயின் திருவேங்கடத்திற்கு தெற்கில் 3 யோசனை தூரத்தில் காஞ்சிபுரத்திற்கு வாயு திசையில் ஆலங்காட்டில் (திருவாலங்காடு) வந்து நடனமிடுங்கள் நான் வந்து தீர்ப்பளிக்கிறேன் என்றார். அவ்விதமே அவ்விடத்தில் பரமசிவனும், பார்வதியும் பயங்கர நடனம் புரிந்து நிற்க, நாமகளுடன் வந்த பிரம்மனும் பிற தேவர்களும் என்ன சொல்வது எவ்வாறு தீர்ப்பளிப்பது என்று புரியாமல் இருவரின் ஆட்டத்தையும் வியந்து வியந்து பேசி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் இருந்தனர். |