9. திருமங்கையாழ்வார் தமது திருநெடுந்தாண்டகத்தில் 30 பாக்களை இட்டருளினார். முதல் பத்துப்பாக்களும் எம்பெருமான் எல்லாம் தாமேயான தன்மையில் அமைந்தவை. இரண்டாம் பத்து திருத்தாயார் (பிராட்டி) வார்த்தையாக அமைந்தவை. இந்த இரண்டாம் பத்தின் மூன்றாம் பாடலில், தான் வளர்த்தெடுத்த கிளியை எடுத்து அணைத்து வைத்துக்கொண்டு சொல்கிளியே கல்மாரி காத்தவனைச் சொல், கச்சி யூரகத்தானைச் சொல், வெஃகாவில் துயின்றவனைச் சொல், மல்லர்களைப் பொருது வென்றவனைச் சொல் என்று அவனது திருப்பெயர்களெல்லாம் எடுத்துக் கூறி, சொல்லாய் கிளியேச் சொல்லாய் என்று பிராட்டி வார்த்தையாக இத்தலத்தை மங்களாசாசனம் செய்திருப்பது சிறப்பம்சங்களுள் தலையாயதாகும். |