தொடங்கினார். அவ்விதம் வருங்காலையில் எண்ணற்ற ரிஷிகள் தவமியற்றும் வீட்சாரண்யம் எனப்படும் இவ்விடத்தையடைந்து இங்குள்ள ஹ்ருதத்த பாப நாசினி என்னும் தீர்த்தத்தில் தேவர்கள் வந்து நீராடிச் செல்வதைக் கண்டு இந்த ஆரண்யத்தில் ஒரு குடில் அமைத்து நெடுங்காலம் பெரும் பக்திபூண்டு எம் பெருமானிடம் பக்தி செலுத்திப் போது போக்கி வந்தார். இவ்வாறு தினந்தோறும் இவர் மிகுந்த ஈடுபாட்டுடன் பூஜை செய்து வருகையில் எப்போதும் போல் ஓர்நாள் அரிசியை மாவாக்கி எம்பெருமானுக்கு அமுது படைத்து யாராயினும் அதிதி வருவார்களா என்று காத்திருந்தார். இந்த விரதத்தைப் பன்னெடுங்காலம் விடாது பின்பற்றி வந்தார் சாலி ஹோத்ரர். இந்நிலையில் அதிதியை எதிர்பார்த்திருந்த அந்நாளில் இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான் தானே ஒரு முதியவர் ரூபத்தில் வந்து கேட்க தாம் வைத்திருந்த மாவில் பாதியைக் கொடுத்தார் சாலிஹோத்திரர். அதை உண்ட பின்பும் தமது பசியடங்கவில்லையென்று முதியவர் கேட்க தனக்கு வைத்திருந்த மீதி மாவினையும் கொடுத்தார். அதனையும் உண்டு முடித்த எம்பெருமான் உண்ட மயக்கால் மிக்க களைப்பாயுள்ளது, படுக்கச் சற்று இடம் வேண்டும் எங்கு படுக்கலாமென்று கேட்க சாலி ஹோத்ரர் தமது பர்ணக சாலையைக் காட்டி இவ்வுள் தேவரிருடையதே இங்கு சயனிக்கலாம். என்று சொல்ல, தனது கிழச் சொரூபத்தை மாற்றிய எம்பெருமான் தெற்கே திருமுகம் வத்துச் சயனித்தார். ஒன்றுமே புரியாத சாலிஹோத்தரர் தாம் செய்த பாக்கியத்தை எண்ணி எம்பெருமானைப் பணிந்து நிற்க தமது வலது திருக்கரத்தை சாலிஹோத்ர முனிவரின் தலையில் வைத்து அவரை ஆசீர்வதித்து என்ன வரம் வேண்டுமென்று கேட்க, இதே திருக்கோலத்தில் எம் பெருமான் இவ்விடத்திலேயிருந்து அருள்பாலிக்க வேண்டுமென சாலி ஹோத்ர முனிவர் வேண்ட எம் பெருமான் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியும் அதற்கிசைந்து அவ்வண்ணமே சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார். முனிவரின் சிரசில் வலது கரத்தால் ஆசி செய்து பிரம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் இடது கரத்தை ஞான முத்திரையாகக் காட்டி காட்சியளித்தார். உடனே விஜயகோடி விமானத்துடன் இத்தலம் உருப்பெற்றது. எம்பெருமான் தாமே வந்து முனிவரிடம் கிங்கிருஹம் ‘படுக்க எவ்வுள்’ எங்குற்றதெனக் கேட்டதால் வடமொழியில் கிங்கிருஹரபுரமென்றும் தமிழில் எவ்வுள்ளூர் என்று மாயிற்று. எம்பெருமானுக்கும் கிங்கிருஹசன், எவ்வுட்கிடந்தான் என்னும் திருநாமமாயிற்று. |