பக்கம் எண் :

370

     5. நைமிசாரண்யம் 6. புஷ்கரம்
     7. நாராயணபுரம்.

     இத்தலங்களில் எல்லாம் பெருமாள் தாமாகவே உகந்து
எழுந்தருளியுள்ளார்.

     இராமாயணம் இயற்றிய வால்மீகி இந்த ஸ்தலத்திற்கு வந்ததாக ஒரு
வரலாறு உண்டு. இங்குவந்த வால்மீகி மலைமீதேறி சயனத் திருக்கோல
அரங்கன் அமர்ந்த திருக்கோல நரசிம்மன், நடந்த திருக்கோல திருவிக்ரமன்
ஆகிய மூவரையும் வழிபட்டு கீழே இறங்கலானார்.

     ஏனோ தெரியவில்லை. இம்மூவரைச் சேவித்தும் வால்மீகிக்கு பூரண
திருப்தியுண்டாகவில்லை. உள்மனதை ஏதோ வருடியது போல இருந்தது. கீழே
இறங்கியதும் கீழ்த்திசை நோக்கி கரங்களை குவித்த வால்மீகி என் பிரிய
ராமன் இங்கு இல்லை. ரமனியமான ராமபிரானே எங்கே உன் பேரழகுத்
திருவுருவம் என்று ராமனைப் பிரிந்த நெஞ்சு வேகுவதுபோல நீர்மல்கப்
பிரார்த்தித்து நின்றார்.

     அந்தர்யாமியான பரஸ்வரூப நாராயணன் வால்மீகியின் பிரார்த்தனைக்கு
இரங்கினார். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள்கள் மூலமாகவே வால்மீகிக்கு
காட்சியளித்தார். அதாவது இங்குள்ள ரெங்கநாதனே ராமனாகவும், லட்சுமி
தேவியே ஜானகியாகவும், ஆதிசேடன் இலக்குமணனாகவும் சங்குச்சக்கரங்கள்
சத்ருக்கனர், பரதராகவும், விஸ்வக்சேனர் சுக்ரீவனாகவும் கருடன்
ஆஞ்சநேயராகவும், ரம்மியமான நீர்வண்ண ரூபத்தில் காட்சி கொடுத்து
வால்மீகியின் கண்ணீரைத் துடைத்ததாக ஐதீஹம்

     ராமனின் பேரழகில் அதாவது நீர்வண்ணனாக ராமன் காட்சி அளித்த
தோற்றப் பொலிவை கண்டு மயங்கி நின்ற வால்மீகி இதே திருக்கோலத்தை
எல்லோருக்கும் காட்ட வேண்டுமென்று வேண்டி நிற்க அவ்வண்ணமே
ஆயிற்றென்பது வரலாறு. தாமரை மலர் பீடத்தில் அஸ்த முத்திரை பொருந்திய
அபயமளிக்கும் அழகிய திருக்கரத்துடன், திருமார்பை சாளக்கிராம மாலை
அலங்கரிக்க நீர்வண்ண ரூபத்தில் இங்குகாட்சி தருகிறார்.

     இந்த மலைக்குத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய
வந்தபோது தொடர்மழை பெய்து அடைமழையாக மாறி மலையைச் சுற்றிலும்
அரண்போல் நீர் சூழ்ந்துகொண்டது. திருமங்கையால் பெருமாளைத் தரிசிக்க
முடியவில்லை. ஒன்றிரண்டு நான்கைந்து ஆறேழுவென நாட்கள் கடந்து