சிறப்புக்கள் 1. பூலோகத்தில் அவதாரம் முடிந்தபின் வைகுண்டத்திற்கு திரும்பும் காட்சி இங்கு ஸேவையாகிறது. அதாவது. அமர்ந்த நிலையில் - நரசிம்மராக நின்ற நிலையில் - நீர்வண்ணராக சயன நிலையில் - ரெங்கநாதனாக நடந்த நிலையில் - உலகளந்த திரிவிக்ரமனாக அதாவது மேலே கண்ட அவதாரங்களின் முடிவில் எம்பெருமான் நேராக மீண்டும் வைகுண்டம் சென்று விடுகிறார். அவதார ரகஸ்யம் முடிந்துவிடுகிறது. 2. இந்த ஸ்தலம் ஆயுள் விருத்தியைத் தரக்கூடியது. திருமணப் பிராப்தி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு செய்யக் கூடிய புண்ணியங்கட்கு (தர்மங்கட்கும் யாகங்கட்கும் 100 மடங்கு பலம் அதிகரிப்பதால்) பலமான பலன் கிடைக்கிறது. இங்கு செய்யப்படும் ஆயுள் விருத்தி ஹோமங்களும், திருமணத்தடை அல்லது திருமணம் நடைபெறாமல் இருத்தல் போன்றன நீங்கி திருமணம் விரைவில் நடக்க இப்பெருமானிடம் வேண்டும் வேண்டுதல்கள் விரைவில் கைகூடுகின்றன என்பது இங்கு காணப்படும் அதிசயிக்கத்தக்க உண்மையாகும். இங்கு இராமபிரான் கல்யாணராமனாக அதாவது வனம் ஏகும் முன் உள்ள சீத்தா ராமனாக திருமணக் கோலத்தில் காட்சி தருவதும் (திருமண வேண்டுதல்கள் நிறைவேறும்) நிகழ்ச்சிக்கு ஒரு காரணமாகும். 108 திவ்ய தேசங்களில் சோளிங்கபுரம் போல் இப்பகுதி வாழ் மக்களும் இதையொரு பிரார்த்தனை ஸ்தலமாகவே கொண்டு வழி பாடியாற்றுகின்றனர். 3. பூலோக வைகுண்டமென போற்றப்படும் திருவரங்கம், திருமலை, திருக்கோட்டியூர் ஆகிய ஸ்தலங்கட்கு உண்டான புகழோடு இத்தலத்தையும் இணைத்துப் பாசுரித்திருக்கிறார் பூதத்தாழ்வார். 4. திருக்கோவிலூர் அஹோபிலம் (சிங்கவேள் குன்றம்) திருவரங்கம், அயோத்தி ஆகிய திவ்ய தேசங்களை ஒரு சேர சேவித்த உணர்வை இம்மலையில் உள்ள பெருமாள்களை தரிசித்து திரும்பும்போது உணர முடிகின்றது. |