பக்கம் எண் :

383

சிறப்புக்கள்

     மாமல்லபுரத்தின் சிறப்புக்கள் குறித்துத் தனிப்பெரும் நூலொன்றே
எழுதிவிடலாம். இருப்பினும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு கூறிப் போக
விழைகிறோம்.

     1. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே இது மிகச் சிறந்த
கடற்கரை நகரமாகவும், பெரிய துறைமுகமாகவும், பன்னாட்டு வணிகர்களும்
வந்து குழுமி பண்டமாற்று செய்துகொள்ளும் மிகப்பெரிய வாணிகத்தலமாகவும்
விளங்கியது. கி.பி. முதல் நூற்றாண்டில் பெரிப்பளசு தமது நூலில்
இவ்வூரினையும் பாண்டிச்சேரியையும் பற்றி குறிக்கிறார். இங்கு கிரேக்கர்கள்.
ரோமானியர்கள். கோணகர்களின் வாணிகக் கப்பல்கள் நிதிக் குவியலோடு
வந்து நம் நாட்டு பொருட்களையும், யானைகளையும் ஏற்றிச் சென்றனர்.
எண்ணற்றக் கப்பல்கள் வந்தும், போய்க் கொண்டும் கடலில் ஓவியக்
காட்சிகளைத் தீட்டிக் கொண்டிருந்தன. இத்தகு வணிக வளர்ச்சி சிறந்தோங்கிய
நிலமையை திருமங்கையாழ்வார் தம் பாடலில் குறிப்பிடாது விடுவாரா என்ன?
 

     புலங்கொள் நிதிக்குவையோடு
          புழைக் கைம்மா களிற்றினமும்
     நலங்கொள் நவமணிக் குவையும்
          சுமந்து எங்கும் நான்று ஒசிந்து
     கலங்கள் இயங்கும் மல்லைக்
          கடல் மல்லைத் தல சயனம்
     வலங்கொள் மனத்தார் அவரை
          வலங்கொள் என் மட நெஞ்சே
                               - என்கிறார்

     2. சங்க காலத் தொகை நூலான பத்துப்பாட்டில் தொண்டைமான்
இளந்திரையன் மீது உருத்திரங் கண்ணனார் என்பார் பாடிய பாடலில் இந்த
மாமல்லபுரம் குறிக்கப்படுகிறது. அந்தக் காலத்திலேயே (நீர்ப்பாயல் (சலசயனம்)
சலசயனம் என்று குறிக்கப்பட்டுவிட்டது)

     வண்டல் ஆயமொடு உள்துறை தலைஇப்
          புனல் ஆடும் மகளிர் இட்ட பொலங்குழை
     இரைதேர் மணிச்சிரல் இரைசெத்து எரிந்தென