பக்கம் எண் :

394

     சிவனுக்கு தனிக்கோவில் உள்ளது. தொட்டாச்சார்யார் தான் ஒரே
கோவிலில் இருந்த சிவனைப் பிரித்து தனிக்கோவில் அமைத்தவர் என்று
கூறுவர்.

     15. இங்குள்ள பெரியமலையில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார்.
இது 1500 படிகள் கொண்டது. இவரைத் தரிசித்துவிட்டுத்தான் சிறிய மலையில்
எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும்.

     16. பெருமாளுக்கு ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் ஒவ்வொரு விதமான
வழிபாட்டு நியமம் உள்ளது. சில தலங்களில் உண்டியல் போடுவது. சில
தலங்களில் மொட்டை. ஆனால் இங்கு பக்தர்கள் படியேறி வந்து தம்மைச்
சேவிப்பதை பெருமாளே விரும்புவதாக ஐதீஹம். (இங்கு விஞ்ச் ரயில் போட
முயற்சிக்கப்பட்டு தோல்வி கண்டு விட்டது)

     17. மலைமேல் இருக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு பக்தோசித ஸ்வாமி
என்ற பெயருண்டு. பக்தர்கள் உசிதப்படி அருள்பவர் என்பது பொருள்.
அடிவாரத்தில் உள்ள பக்தோசித சுவாமிக்கு தக்கான் எனப் பெயர்.
தீர்த்தத்திற்கும் தக்கான் குளம் என்பதே பெயர். திருமங்கையாழ்வார்
இச்சொல்லை எடுத்தாண்டுள்ளார்.

     18) அக்காரக் கனி என்றால் என்ன? இனிப்பே உருவான வெல்லமே
மரமாகப் பூத்துக் காயாகி கனியாகி நமக்கு கிடைக்கப்பெற்றது போல்
சுவைமிக்க கனியாகும். அது போன்றவராம் இப்பெருமாள் (அதாவது வேண்டிய
மாதிரியே வரம் கொடுப்பவர் என்பதுதான்)

     19) ‘வண்பூங்கடிகை இளங்குமரன்’ என்பது பேயாழ்வார் மங்களாசாசனம்

     20) நூற்றெட்டு திருப்பதியந்தாதியில்,
 

     சீரருளால் நம்மைத் திருத்தி நாம் முன்னறியாக்
          கூரறிவும் தந்தடிமை கொண்டதற்கே - நேரே
     ஒரு கடிகையும் மனமே உள்ளுகிலாய் முத்தி
          தரு கடிகை மாயவனைத் தான்

     21) கடிகாசலம் என்னும் இங்கு ஒரு நாழிகை நேரம் தங்கியிருந்து
அக்காரக் கனியான எம்பெருமானை சேவித்தாலே மோட்சம் சித்திக்கும் என
நூல்கள் மொழிகின்றன. அவ்விதம் திருக்கடிகை செல்ல முடியாதவர்களும்
இருக்கலாம். அவர்கள் ஒரு நாழிகை திருக்கடிகையை மனதில் நினைத்து
நரசிம்மரைச் சிந்தித்தாலே போதுமென்கிறார் பிள்ளைப் பெருமாளையங்கார்.