பக்கம் எண் :

42

     வரலாற்றாய்வர் பகர்வர். இச்சன்னதிக்கு எதிரே உள்ள பரமன்
மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் பார்ப்பதற்குப் பேரழகு பொருந்தியவை.
இவை தேவராஜன் குறடு என்றும் கூறுவர்.

     18) வைணவப் பேரறிஞர்களான பட்டர், வடக்குத் திருவீதிப்பிள்ளை,
பிள்ளை லோகாச்சார்யர், பெரியநம்பி போன்றோரின் அவதார ஸ்தலமிது.

     19) இராமானுஜரும், மணவாள மாமுனிகளும் இங்கு நிகழ்த்திய
உபன்யாசங்களை கூட்டமாக அமர்ந்து சீடர்கள் கேட்கும் வண்ணம்
தீட்டப்பட்டுள்ள சிற்பங்கள் நம் சிந்தையை எங்கோ கொண்டு செல்கிறது.

     20) பாதுஹாஸ ஹஸ்ரம் என்ற உயர்ந்த காவியம் ஸ்ரீநிகாமநந்த
தேசிகனால் இப்பெருமாள் மீது பாடப்பட்டதாகும்.

     21) இக்கோவிலின் நான்காவது திருச்சுற்றில் தன்வந்திரி
சன்னிதிக்குவடபுரகோபுரவாசலின் பாறையில் 5 குழிகள் உண்டு.
இவ்விடத்திற்கு மூன்று வாசல்கள் வழி வரமுடியுமாதலால் இதற்கு ஐந்து குழி
மூன்று வாசல் என்பது பெயர். இங்கு தாயார் அரங்கன் வருகிறாராவென்று
இந்த ஐந்து குழிகளிலும் தன் கைவிரல்களை வைத்து மூன்று வாசல்கள்
வழியாகவும் பார்ப்பாராம்.

     22) திருவரங்கமும் திருமதில்களும் கீழ் ஏழு உலகம், மேல் ஏழு
உலகம் என்பார்கள். எத்தனை உலகங்களோ, யாரே அறிவர் எம்பெருமானின்
லீலைகளை. ஆனால் இந்த திருவரங்கத்திற்கு மட்டும் 7 மதில்கள்.
ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றுச் சிறப்புக் கொண்டவை. ஒவ்வொரு விதமான
தெய்வாம்சம் கலந்தவை. ஏழு உலகங்கட்கு உண்டான பெயர்களையே இந்த
ஏழு மதில்கட்கு வைத்திருப்பதும், பூலோகத்திலிருந்து ஒவ்வொரு உலகமாக
கடந்து சென்றால் ஏழாவது உலகமாக சத்திய லோகம் இருக்குமோ என்று
எண்ணுவதைப் போல, சத்தியலோகத்திலிருந்தே இந்தப் பெருமாள் வந்ததால்
அந்த சத்திய லோகத்திற்கு வழிகாட்டுவதைப்போல் ஏழு மதில்களில்
முதலாவது மதிலுக்கு பூலோகம் என்றே பெயரிட்டு எம்பெருமான் பள்ளி
கொண்டுள்ள கருவறை மதிலுக்கு சத்தியலோகம் என்றே பெயர்
வைத்திருப்பதும் பெரிய ஆராய்ச்சிக்கு உரிய விஷயமாகும்.