3. திருப்பதிசாரத்தில் பிறந்த உடையநங்கை ஆழ்வார் திருநகரியைச் சார்ந்த காரி என்பாருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டு உடைய நங்கை புத்திரப்பேறு வேண்டி இத்தலத்தில் 41 நாட்கள் விரதமிருந்து பெருமாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தி கலி 43வது நாள் நம்மாழ்வாரைப் பெற்றெடுத்தார். வைகாசி விசாகத்தன்று அவதரித்த நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிப்பிரான் சன்னதியில் விட அந்தக் குழந்தை தவழ்ந்து புளியமர பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாஸன யோகத்தில் ஆழ்வாராய் அமர்ந்தார். 4. திருக்குறுங்குடி எம்பெருமானை வேண்டிய பின்பு உடைய நங்கை இத்தலத்திற்கு வந்து 41 நாள் தவமிருந்தார். 5. இங்கு மூலவருக்கு வலப்புறத்தில் இராம, இலக்குவ, சீத்தா பிராட்டியாருண்டு. இதற்கு ஒரு காரணக் கதை உண்டு. வீடணன் அயோத்தியில் ஸ்ரீஇராம பிரானின் பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது அவரால் கொணரப்பட்ட பெருமான் அரங்கனாக பள்ளிகொண்ட பின்பு விபீஷ்ணன் இவ்வழியாக இலங்கை செல்லும் போது இப்பெருமானை வழிபட்டு வேண்டுதல் ஒன்று உண்டு என்று விளம்பினார். உடனே வீடணனுக்கு காட்சி கொடுத்த திருவாழ்மார்பன் யாது வேண்டுமென அன்போடு வினவ, என்னால் இராமாவதார திருக்கோலத்தை மறக்க முடியவில்லையே என்று கண்ணீர் மல்க நின்று மீண்டும் ஒருமுறை காட்சியைக் காண ஆசைப்படுகிறேன். என்று சொல்ல அவ்விதமே காட்சி தந்தருளினார் என்பர். 6. குலசேகர ராஜன் (குலசேகர ஆழ்வார்) கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தைப் புதுப்பித்து வாகனம். மதில் போன்ற திருப்பணிகள் பலவும் செய்து, கொடிக்கம்பத்தையும் (துவஜஸ்தம்பத்தையும்) நிர்மாணித்து பிரம்மோத்ஸ்வமும் செய்துவைத்தார். 7. ஆஞ்ச நேயரின் வேண்டுகோளுக்கிணங்கி அகத்தியர் இங்கு இராமாயணம் அருளியதாகவும் கூறுவர். |