மூலவர் காய்சின வேந்தர் (காசினி வேந்தர்) பூமிபாலர், புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம். தாயார் மலர்மகள் நாச்சியார், பூமிப்பிராட்டி, புளிங்குடிவல்லியென்ற சிறிய உற்சவப் பிராட்டியுமுண்டு. தீர்த்தம் இந்திர தீர்த்தம், நிர்ருதி தீர்த்தம் விமானம் வேதசார விமானம் காட்சி கண்டவர்கள் இந்திரன், நிர்ருதி, வருணன், யக்ஞ சர்மா. சிறப்புக்கள் 1. இங்குள்ள இலக்குமி தேவி, பூமிப்பிராட்டி, நாச்சியார்களின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிகமிகப் பெரியவைகள். 2. பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரிய காட்சியும், இங்கு தவிர வேறெங்கும் காண்டற்கரிது. (பிற இடங்களில் அல்லது பொதுவாக திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து செல்லும் தாமரைத் தண்டின் மலரில்தான் பிரம்மா அமர்ந்திருப்பது வழக்கம்) 3. நவக்கிரகங்களில் வியாழனொடு சம்பந்தப்பட்ட ஸ்தலம் 4. சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை மூலஸ்தானத்தைச் சுற்றி வருகையில் சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு ஜன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிறஸ்தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும். 5. தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள நம்மாழ்வாரின் பாசுரத்தைக் கூர்ந்து நோக்கினால் மேற்சொன்ன வரலாறு அனைத்தும் அதில் பொதிந்துள்ள நிலையைக் கண்ணுறலாம். |