பக்கம் எண் :

574

     வெல்போர் ராமன் அருமறைக் கவித்த
          பல்வீழ் ஆலம் போல்
     ஒலி அவிந்த தன்றிவ் வழுங்கலூரே”

     வேலினை உடைய பாண்டியரது மிக்க பழமையுடைய திருவணைக்
கரையின் அருகில் முழங்கும் இயல்பினதாக பெரிய கடலில் ஒலிக்கின்ற
துறைமுகத்தில் வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை
ஆய்தற் பொருட்டாக புட்களின் ஒலி இல்லையதாகச் செய்த
பலவிழுதுகளையுடைய ஆலமரம் போல இவ்வூரில் எழும் ஒலி அவிந்து
அடங்கியது.

     14. இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் சேதுபதிகள்
தொன்றுதொட்டு இத்திருத்தலத்திற்கு ஆற்றும் தொண்டு அவர்தம்
பெருமையை வரலாற்றோடு இணைக்கும் சிறப்பை பெற்றதாகும்.

     15. ரத்னாகாரம் எனப்படும் இந்த சேதுவை கண்ணுற்ற பேர்கட்குப்
பாவங்கள் இல்லையென்று இராமபிரானே தெரிவித்துள்ளார். “திரு அணை
காண அருவினை இல்லை” என்று இதைக் கூறுவர். இதன் மேன்மையைக்
கம்பர்.
 

     “மெய்யின் ஈட்டத்து இலங்கையர் மேன்மகன்
          மெய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது
     ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால்
          கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்”

     ஐயனே குபேரனது புண்ணியத்தால் முதலில் நான் அழகாகப்
படைக்கப்பட்டேன். பின்பு உனது தவமகிமையால் ராவணன் வந்து
குடியேறினான். நெடிது வாழ்ந்தான். நாளடைவில் அரக்கர்கள் பல
கொடுஞ்செயல்கள் செய்து இங்கு பாபச் சுமை பெருகிவிட்டது. இனிமேல்
என்னால் பொறுக்க முடியாது. நீ விரைவில் வந்து தீமை போக்கி என்னைப்
புனிதமாக்கி அருள் என்று இராமனை நோக்கி இலங்கா தேவி கையை நீட்டி
நின்றது போல் (சேது) இவ்வணை காட்சியளிக்கின்றதென்பதைக் கம்பன் தன்
இராமாயணத்தே காட்டுகிறான்.

     நாங்கள் மணலில் சிறு வீடு கட்டி விளையாடிக் கொண்டிருக்கிறோம்.
எம்பெருமானே நீயோ அன்று