பக்கம் எண் :

578

95. திருமெய்யம்

     மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்
          கொய்யார் குவளையும், காயாவும் போன்றிருண்ட
     மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்
          கையானை, கை தொழாக் கையல்ல கண்டோமே - (2016)
                               - பெரிய திருமொழி 11-7-5

     என்று திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற இத்தலம்
புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் நடு மையத்தில்
அமைந்திருக்கிறது. பசும்பொன் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரிலிருந்தும்
இவ்வூருக்குச் செல்லலாம்.

     பிரம்மாண்ட புராணம் இத்தலத்தைப் பற்றி மிகவும் விவரித்துப்
பேசுகிறது. இதில் நாரதருக்கும் சிவபெருமானுக்கும் நடந்த ஸம்பாஷணையாக
10 அத்தியாயங்களில் இத்தலத்தின் வரலாறு பேசப்படுகிறது.

     சத்தியகிரியென்றும், சத்திய சேத்ரமென்றும் புராணம் புகழக்கூடிய
இத்தலத்தில் ஆதிசேடன், சந்திரன், சத்திய மகாமுனி போன்றோர் தவமிருந்து
நற்பெயர் பெற்றுள்ளனர். ஒரு காலத்தில் மதுரையை ஆண்டபுருரவச்
சக்ரவர்த்தியும் இங்குவந்தே மோட்சம் எய்தினார்.

ஆதிசேடன் தவம்

     தன்னிடம் தீய குணங்களே மிகுந்திருப்பதால் தனக்கு ஸத்வ குணம்
வேண்டுமென்று ஆதிசேடன் எம்பெருமானை ஒரு நாள் வேண்டினான்.
அவ்வாறாயின் என்னைக் குறித்துக் கடுந்தவஞ்செய்து நீ அந்த வரத்தைப்
பெற்றுக்கொள் என்று பெருமாள் உரைத்ததும் ஆயிரம் தலைகளுடனும் பல
மைல் நீளமுடையதுமான தனது உடம்பை 5 தலைகளுடனும், ஒரு பாக
நீளத்தால் அளவிடத்தக்கப் பருமனுடனும், ஒரு பனை மரத்தின் அளவிற்கு
நீண்ட சரீரத்தையும் எடுத்துக் கொண்டு பூமிக்குள்ளாகவே துளைத்துக்
கொண்டு வந்து இவ்விடம் வெளிப்பட்டான். ஆதிசேடன் வந்த மார்க்கம்
பள்ளமானபடியால் அது ஸர்ப்ப நதியாயிற்று (பாம்பாறு) அவன் வெளிப்பட்ட
இடம் சத்திய சேத்ரமாயிற்று. இங்கிருந்த சத்தியகிரிக்கு அருகில் உள்ள சத்திய
புஷ்கரணியில் நீராடி எம்பெருமானைக் குறித்து கடுந்தவஞ் செய்யலானான்
ஆதிசேடன்.

     தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு ஹயக்ரீவ வடிவத்தில் (குதிரைமுகம்
கொண்ட வித்தைகட்கு தேவதையான அவதாரம்)