நம் முன்னோர்களால் பின்பற்றப்படவில்லையாதலால் ஒரே பெயருள்ளவர்கள் திரும்பத் திரும்ப வருகின்றனர். புகழ் மண்டிக்கிடக்கும் தமிழ்நாடு என்றாற்போல் 108 திவ்ய தேசங்களில் 82 திவ்ய தேசங்களைத் தன்னகத்தே கொண்டது, நம் தமிழ்நாடு. எந்தெந்த நாட்டின் ஸ்தல வரலாற்றுகளை எல்லாம் அறிந்து கொள்ளும் நாம் நம் நாட்டில் உள்ள ஸ்தல வரலாற்றுகளை அறிந்து கொள்ள வேண்டாமா? இந்நூலில் குற்றங் குறைகள் இருப்பின் அதைச் சுட்டிக் காட்டினால் மனமுவப்புடன் அவை மறுபதிப்பில் வெளியிடப்படும். சில ஸ்தலங்களில், மிக முக்கியமான நிகழ்வுகள் விடுபட்டுப் போயிருந்தாலோ அல்லது அவசியம் சேர்க்க வேண்டிய கருத்துக்களைத் தெரிவித்தாலோ அவைகள் மிகுந்த நன்றியறிதலோடு பெறப்பட்டு மறுபதிப்பில் தொடரும். இந்நூற் பணியில் ஈடுபட்ட காலை தலவரலாற்று சம்பந்தமான குறிப்புகளும், விளக்கங்களும் கொடுத்துதவிய பெரு மக்களுக்கும், நூல்கள் கொடுத்துதவிய பெருந்தகையாளர்கட்கும், சந்தேகங்கள் குறித்து கடிதங்கள் எழுதியபோது அவைகட்கும் தெளிவான விளக்கமெழுதிய அறிஞர் பெருமக்களுக்கும் என் நன்றியறிதலைக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன். என்னை ஒரு பொருட்டாக மதித்து தன் திருமாளிகையில் தங்க வைத்து, எனது கையெழுத்துப் பிரதிகளை ஆழ்ந்து கற்று மிக்க உவப்புடன் ஆசியுரை நல்கிய ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீவானமாலை ஜீயர் சுவாமிகள், ஸ்ரீரங்க ஜீயர் சுவாமிகள் ஆகியோரின் திருவடிக் கமலங்கட்கு கைம்மாறில்லாக் கடன்பட்டுள்ளேன். எம்பெருமானான பகவான் திருமாலுக்கு (விஷ்ணுவுக்கு) எத்தனையோ மகான்களால் இயற்றப்பட்ட காவியங்களும், கவிநயம் மிக்க பனுவல்களும், பார்புகழும் நூல்களும் அவனைச் சுற்றிப் புகழாரம், இசைத்துக் கொண்டே இருப்பினும் அடியேனின் சிறு பனுவலையும் கருணைக் கடலன்னக் கண்கள் படைத்த அந்தக் கண்ணபிரான் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அவனது பொற்பாத கமலங்களில் ஒரு சிறு மலராக இதைச் சமர்ப்பிக்கிறேன்.
|
அடியேன், வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் B.A. காரைக்குடி
|
|