பக்கம் எண் :

62

4. திருவெள்ளறை

ஆறினோடொரு நான்குடை நெடுமுடியரக்கன்றன் சிரமெல்லாம்
     வேறுவேறுக வில்லது வளைத்தவனே யெனக்கருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடை தாமரைமலர் வார்த்த
     தேறல் மாந்தி வண்டின்னிசை முரல் திருவெள்ளறை நின்றானே
                              (1374) பெரியதிருமொழி 5-3-7

     என்று இராமவதார மகிமையில் மூழ்கி இயற்கை எழிலோடு இயைந்த
திருவெள்ளறை நின்ற பெருமாளைப் போற்றுகிறார், திருமங்கையாழ்வார்.
இத்திருவெள்ளறை திருச்சியிலிருந்து 13 மைல் தொலைவில் துறையூர்
செல்லும் பாதையில் உள்ளது.

வரலாறு

     ஸ்ரீரங்கத்திற்கும் முந்தினதான இத்திருவெள்ளறையைப் பற்றி பல
புராணங்களில் பேசப்படுகிறது. இதே கருத்தையே வைஷ்ணவ சம்பந்தமான
வடநூல்கள் யாவும் பேசுகின்றன. ஸ்ரீரங்கத்திற்கும் முந்தியதான இதன்
தொன்மையைக் குறிக்கவே ஆதிவெள்ளறை என்று இது அழைக்கப்படுகிறது.
திரு என்பது உயர்வைக் குறிக்கும். வெள்ளறை என்பது வெண்மையான
பாறைகளாலான மலை என்பதைக் குறிக்கும். வடமொழியில் ஸ்வேதகிரி
என்றும், உத்தம ஷேத்ரம், ஹித ஷேத்ரம் என்றும் பெயர் பெறுகிறது.

     அயோத்திக்கு அதிபதியாய் விளங்கிய சிபிச் சக்ரவர்த்தி ஒரு சமயம்
தன் படை பரிவாரங்களுடன் வந்து திருவெள்ளறையில் தங்கி இருக்கும்
போது, அங்கு தோன்றிய ஒரு வெள்ளைப் பன்றியைத் (ஸ்வேத வராம்) துரத்த
அது பக்கத்தில் உள்ள ஒரு புற்றில் சென்று மறைந்துவிட்டது. இதனைக்கண்டு
ஆச்சர்யமுற்ற சிபி அங்கே தவம் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேயரை
அணுகி வினவ, அவர் சொற்படி பன்றி மறைந்த அப்புற்றுக்குப் பாலால்
திருமஞ்சனம் செய்து வழிபட உடனே பகவான் சிபிச் சக்கரவர்த்திக்கும்,
மார்க்கண்டேயருக்கும் நின்ற திருக்கோலத்தில் காட்சியருளியதாகவும்,
அதனாலேயே “ஸ்வதே வராஹத் துருவாய் தோன்றினான் வாழியே” என்ற
திருப்பெயரும் இப்பெருமாளுக்கு உண்டாயிற்று.