கொடியவனாக இருந்தது மட்டுமன்றி யாகங்களை அழித்து ரிஷிகட்குத் துன்பம் விளைவித்துக் கொடும்பாதகம் புரிந்து வந்தான். இந்நிகழ்ச்சி இவ்வூரில் இராமாவதார காலத்தில் நிகழ்ந்ததாகும். ரிஷிகள் இராமபிரானிடம் சென்று லவணாசுரனை சம்ஹாரம் செய்து விசுவாமித்திரருக்கு உதவியது போல தமக்கும் உதவி தம்மை ரட்சிக்க வேண்டுமென்று விண்ணப்பித்தனர். ராமன் தன் தம்பி சத்ருக்கனை அனுப்பி லவணாசுரனை அழித்தான். அரக்கனையழித்த பிறகு பிறைவட்ட வடிவில் யமுனை நதிக்கரையில் இந்த மது நகரத்தை விரிவாக்கி புதுமைப்படுத்தி மதுரா என்று பெயரிட்டு சத்ருக்கனன் நெடுங்காலம் ஆண்டு வந்தார். இவரது வம்சத்தாருக்குப் பிறகு இந்நகரம் வசுதேவரின் பரம்பரையினருக்கு வந்துற்றதாக ஐதீஹம். இந்த மதுராநகர்தான் இன்று கிருஷ்ண ஜென்ம பூமியாக தனது தொல்லியல் புகழை மெல்லிய வேணுகானத்தில் இழைத்துக் கொண்டுள்ளது. 2. ஆயர்பாடியில் இந்திர பூஜை நடப்பது வழக்கம். இந்திரனுக்கு ஆண்டுதோறும் யாதவர்கள் பூஜை நடத்தி மழை வேண்டி ஆடல் பாடல் புரிவர். ஸ்ரீகிருஷ்ணன், ஆயர்பாடியில் வளர்ந்து வரும் சமயம் ஒரு நாள் இந்திர பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கவே இவைகளெல்லாம் என்னவென்று கேட்டான். இந்திர பூஜைக்காக இந்திரனுக்குப் பிடித்தமான உணவு வகைகளைச் செய்து கொண்டுள்ளோம் என்று சொன்னவுடன் அட அப்படியா இந்த உணவு வகைகள் எனக்கு பிரியமானவைகள் தான் இவைகளை எனக்கே படையுங்கள் என்று கூறி கோவர்த்தன மலைக்கு அவ்வுணவுகளை இடச்சொல்லி தானே கோவர்த்தன மலையாக இருந்து முழுதும் உண்டு தீர்த்தான் உலகுண்டவாயன். இதனால் சீற்றம் கொண்ட இந்திரன் கடும் மழையை உண்டாக்கி ஆநிரைகளையும், ஆயர்களையும் அப்பாலும் இப்பாலும் அலைக்கழிக்க எல்லோரும் ஒன்றாகக் கண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கோவர்த்தன மலையருகே ஓடி வந்தனர். இவர்கள் வருவதைக் கண்டவுடன் கண்ணன் அந்த மலையை பெயர்த்தெடுத்து தலைக்குமேல் குடைபோல் பிடித்துக் கொள்ள அதற்குள் வந்து ஆயர்களும், ஆநிரைகளும் |