பக்கம் எண் :

634

     2. இது கண்ணன் வளர்ந்த இடமல்லவா. எனவே தான் ஆண்டாள்
சீர்மல்கும் ஆயப்பாடி என்றார். இங்கு தினமும் ஆட்டமும், பாட்டும், கூத்தும்
கொண்டாட்டமாக திகழ்ந்ததென்பதை பெரியாழ்வார்

     உறியை முற்றத் துருட்டி நின் றாடுவார்
          நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
     செறி மென் கூந்தலவிழத் திளைத்து, எங்கும்
          அறிவிழிந்தன ராயப்பாடி யாயரே

     அதாவது எப்படியும் கண்ணன் வெண்ணெய்த் திருடிவிடுவான் என்று
நினைத்து முற்றத்தில் நின்று உறியை உருட்டி விடுவார்களாம். தயிரை வாரி
வாரி தன் தோழர்கட்கு பங்கு வைத்துவிடுவாரென்று நினைத்து தாமாகவே
தயிரை எடுத்து தூவி நிற்பார்களாம். இங்கு கண்ணனின்
வேலையென்னவென்றால், பற்றுமஞ்சள் பூசி பாவைமாரோடு பாடியில் சிற்றில்
சிதைத் தெங்கும் தீமை செய்து திரியாயே என்பதுதான்.

     3. ஆழ்வார்களால் பாடப்பட்ட கோவில்களும், மூர்த்திகளும் இப்போது
இல்லையென்றும், தற்போதிருப்பவை வெகு பிற்காலத்தவை என்றும்
கூறப்படுகிறது. இருப்பினும் ஆழ்வார்களின் மங்களாசாசனம் ஒரு
கோவிலுக்கும், ஒரு பெருமாளுக்கும் மட்டும் என்று கொள்ளக்கூடாது.
ஆயர்பாடி முழுமைக்கும் மங்களாசாசனம் பொருந்தும் மதுராவில்
இப்போதுள்ள தொன்மைமிக்க கோவில்களையும், யமுனையையும் ஆழ்வார்கள்
மங்களாசாசனம் செய்ததாகவே கொள்ளலாம்.

     4. அயோத்தியைப் போலவும், துவாரகை போன்றும் பரபரப்பாகக்
காணப்படாவிடினும் அமைதி தவழும் ஆரண்யம் போல் திகழ்கிறது கோகுலம்.

     5. பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய மூவராலும் 22
பாசுரங்களில் மங்களாசாசனம்.

     6. ஆயர்பாடியைச் சேவித்தவர்கட்குச் செல்வம் சேருமென்பது ஐதீஹம்.

     7. சிறைச்சாலையில் தேவகி மைந்தனாகப் பிறந்த கண்ணன் இந்த
ஆயர்பாடியில் உள்ள நந்த கோபர் வீட்டிற்கு ஒருத்தி மகனாய்ப் பிறந்து
ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்துக்