பக்கம் எண் :

முதற் காண்டம்11

                         9
சீதரு ளுடுக்க ளூடு திங்களைப் போலக் கன்னி
மாதரூ ளரிய மாண்பால் வயங்கினா ளன்றித் தன்னிற்
கோதருள் குறையற் றும்பர் குழுவினுக் கெந்தை யண்ட
மீதருள் காட்சி பூத்து வேதியர்க் கொளியே போன்றாள்.
 
சீது அருள் உடுக்கள் ஊடு திங்களைப் போல, கன்னி
மாதருள் அரிய மாண்பால் வயங்கினாள்; அன்றி தன்னில்
கோது அருள் குறை அற்று, உம்பர் குழுவினுக்கு எந்தை
                                         அண்டம்
மீது அருள் காட்சி பூத்து, வேதியர்க்கு ஒளியே போன்றாள்.

      குளிர்ச்சி தரும் விண்மீன்களிடையே தான் ஒரு சந்திரனைப் போல
தன்னைப் போன்ற கன்னிப் பெண்களிடையே அரிய மாண்பால், அவள்
உயர்ந்து விளங்கினாள்; அன்றியும், தன்னுள் பாவத்தைத் தரும் எவ்விதக
குறைபாடும் அற்று, வானவர் கூட்டத்திற்கு நம் தந்தையாகிய ஆண்டவன்
வானுலகத்தில் வழங்கும் தெய்வக் காட்சியைத் தானும் அடைந்து, வேதம்
ஓதும் குருக்களுக்கும் ஒளி போன்று விளங்கினாள்.

     சீது - சீதம் : கடைக்குறை. எந்தை - 'எம் தந்தை' என்ற தொடரின்
மரூஉ.
      
                      10
இளங்கொடி மாட்சி காட்ட வினியதன் னாமந் தந்து
வளங்கொடு நட்பு காட்ட வரைவில வரங்க ளீந்தாள்
விளங்கொளி யுடுத்த மேனி வெண்மதி மிதித்த பாத
முளங்குடு சூட்டுஞ் சென்னி யுடையவள் பரம தாயே
.
 
இளங் கொடி மாட்சி காட்ட இனிய தன் நாமம் தந்து,
வளம் கொடு நட்பு காட்ட வரைவு இல வரங்கள் ஈந்தாள்,
விளங்கு ஒளி உடுத்த மேனி, வெண் மதி மிதித்த பாதம்,
உளங்கு உடு சூட்டும் சென்னி உடையவள் பரம தாயே.

     விளங்குகின்ற சூரியனை ஆடையாக உடுத்த மேனியும்,
வெண்ணிறமான பிறைச் சந்திரனை மிதித்த பாதமும், வானில் உலாவும்
வீண்மீன்களை முடியாகச் சூட்டுதலும் உடையவளாகிய தேவ தாய்,
இளமையான வஞ்சிக் கொடி போன்ற இப்பெண்ணின் மாண்பைக் காட்ட
இனிய தன் பெயரையே இவளுக்கும் பெயராய்த் தந்தாள்;