பக்கம் எண் :

முதற் காண்டம்114

     என்று தாவிதன் சொல்லியதை அரசன் கேள்வியுற்று, ''இவனை
உடனே அழைத்துக் கொண்டு வாருங்கள்'' என்றான்; அதன்படி சென்ற
அந்த நல்ல சிறுவனைக் கண்டதும், ''நீ இறக்க எண்ணினாயோ? மலையைப்
பெயர்த்து எறிந்து, உவமை ஒன்றுமில்லாமல் வென்ற உறுதி படைத்த
அவ்வரக்கனின் சீற்றத்திற்குமுன் நீ எம்மாத்திரம்!'' என்றான்.

     'நீ பொன்ற உன்னினாயோ? என்று மாற்றிக் கூட்டுக.
  
                     22
ஏந்த லீரடி யிறைஞ்சிய விளவலு மறைவான்
காய்ந்த தோர்பகை கடுத்ததன் பவஞ்செயின் மீட்டு
வேய்ந்த தோர்படை வேண்டுமோ கடவுளைப் பகைத்து
வாய்ந்த வாண்மையை மறுத்தனை யெவன்வெல்லா னையா.
 
ஏந்தல் ஈர் அடி இறைஞ்சிய இளவலும் அறைவான் :
''காய்ந்தது ஓர் பகை கடுத்த தன் பவம் செயின், மீட்டு
வேய்ந்தது ஓர் படை வேண்டுமோ? கடவுளைப் பகைத்து,
வாய்ந்த ஆண்மையை மறுத்தனை எவன் வெல்லான், ஐயா?''

     அரசனது இரண்டு அடிகளையும் வணங்கிய சிறுவனாகிய தாவிதனும்
தொடர்ந்து இவ்வாறு சொல்லுவான் : ''கடுமையான தன் பாவமே சினந்த
தன்மையாய் ஒரு பகையாக அமைந்து விடுமாயின், அதுவே கொல்லும்
படை அல்லாது, புறத்தேயிருந்து தோன்றுவதாகிய வேறொரு படையும்
வேண்டுமோ? ஐயா, கடவுளைப் பகைத்து, அவனுக்கு இயல்பாக
அமைந்துள்ள ஆண்மையை மறுத்த ஒருவனை எவன்தான் வெல்ல
மாட்டான்?

     பவம் - 'பாவம்' என்ற சொல்லின் குறுக்கல் விகாரம்.
  
                    23
திறங்க டுத்தகொல் சிங்கமு முளியமும் பாய்ந்து
மறங்க டுத்ததிர் வல்லியத் தினங்களு மெதிர்ந்து
கறங்க டுத்தகால் கழுத்தினை முருக்கிநான் கொன்றே
னறங்கெ டுத்தவ னவற்றினும் வலியனோ வென்றான்.