பக்கம் எண் :

முதற் காண்டம்118

"வெல் வை வேல் செயும் மிடல் அது உன் மிடல், அட! நானோ
எல்வை ஆதரவு இயற்று எதிர் இலாத் திறக் கடவுள்
வல் கையோடு உனை மாய்த்து, உடல் புட்கு இரை ஆக
ஒல் செய்வேன்" எனா, உடை கவண் சுழற்றினன் இளையோன்.

     சிறுவனாகிய தாவிதன் அவனை நோக்கி, "வெல்லும் தன்மையுள்ள
கூர்மையான வேல் தரும் வலிமையாகிய அது ஒன்றே உன் வலிமை, அடா!
நானோ தக்க சமயத்தில் ஆதரவு தரும் ஒப்பில்லா வல்லமை கொண்ட
கடவுளின் வலிய கையின் துணை கொண்டு உன்னைக் கொன்று, உன்
உடலை விரைவில் பறவைகளுக்கு இரையாகுமாறு செய்வேன்" என்று
சொல்லிக்கொண்டே, தன் கையிலுள்ள கவணைச் சுழற்றினான்.

     கோலியாற்றின் நான்கு 'அடா'க்களையும் விஞ்சி நிற்பது தாவிதனின்
ஓர் 'அடா'.
 
                    29
கல்லை யேற்றலுங் கவணினைச் சுழற்றலு மக்கல்
லொல்லை யோட்டலு மொருவருங் காண்கில ரிடிக்குஞ்
செல்லை யொத்தன சிலைநுதற் பாய்தலு மன்னா
னெல்லை பாய்ந்திரு ளிரிந்தென வீழ்தலுங் கண்டார்.
 
கல்லை ஏற்றலும், கவணினைச் சுழற்றலும், அக்கல்
ஒல்லை ஓட்டலும் ஒருவரும் காண்கிலர்; இடிக்கும்
செல்லை ஒத்து அன சிலை நுதல் பாய்தலும், அன்னான்
எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும்கண்டார்

     தாவிதன் கல்லைக் கவணில் ஏற்றியதையும், கவணைச் சுழற்றியதையும்,
அக்கல்லை விரைவில் அரக்கன் மீது செலுத்தியதையும் ஒருவருமே
கண்டுகொள்ளவில்லை. இடிக்கும் மேகம் போன்று அந்தக்கல் அவன்
நெற்றியில் பாய்ந்ததையும், பகலவன் பாய்ந்து வர இருள் நீங்கியதுபோல்
அவன் விழுந்ததையும் மட்டுமே எல்லோரும் கண்டனர்.

     'காண்கிலர்' என்பது நிகழ்ச்சியின் விரைவு குறித்து நின்றது. "எடுத்தது
கண்டார்; இற்றது கேட்டார்," என்ற கம்பராமாயணப் பகுதி (பாலகாண்.
கார். 34) 'ஒருவரும் காண்கிலர் ....................... வீழ்தலும் கண்டார்' என்ற